எக்ஸ் சமூக வலைதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வசதி, இந்திய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்து சமூகத்தை குறிவைத்து வரும் பதிவுகள் பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பதிவிடப்படுவதை உறுதி செய்யும் தகவல்கள் வெளியாகியுள்ளன என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதைச் சுற்றி விவாதம் சூடுபிடித்துள்ளது.
உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் மட்டுமல்ல; அவருடைய எக்ஸ் தளமும் அடிக்கடி சர்ச்சைக்கு காரணமாகும் என்பதை மீண்டும் நினைவூட்டும் வகையில் இந்த விவகம் தலைதூக்கியுள்ளது.
“About This Account” என்ற புதிய அப்டேட் தற்போது கவனம் ஈர்த்து வருகிறது. இந்த வசதி மூலம் அந்தக் கணக்கு எந்த நாட்டில் இருந்து உருவாக்கப்பட்டது, பயனர் பெயர் எத்தனை முறை மாற்றப்பட்டது, எக்ஸ் செயலி எந்த இடத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டது போன்ற விவரங்களை அறிய முடிகிறது.
இதில்தான் அரசியல் புயல் உருவாகியுள்ளது. இந்து மதத்திற்கு எதிரான கருத்துகள் மற்றும் காங்கிரஸ் ஆதரவு பதிவுகள் இந்தியாவுக்கு வெளியே உள்ள நாடுகளிலிருந்து போடப்படுகின்றன என்ற சந்தேகம் நீண்டகாலமாக பாஜக தரப்பில் இருந்து கூறப்பட்டு வந்த நிலையில், இப்போது அதற்கு ஆதாரம் கிடைத்திருப்பதாக பாஜக கூறுகிறது.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய பேச்சாளர் பவன் கேரா அமெரிக்காவில் இருந்து தனது எக்ஸ் கணக்கைத் தொடங்கியிருப்பது, மேலும் மகாராஷ்டிரா காங்கிரஸின் உத்தியோகப்பூர்வ கணக்கு அயர்லாந்தில் இருந்து உருவாக்கப்பட்டிருப்பது போன்ற தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், இந்தியாவுக்கு எதிரான பதிவுகள் தெற்காசிய நாடுகளில் இருந்து வந்திருப்பதும் வெளிப்பட்டுள்ளது.
காங்கிரஸ் பாகிஸ்தான் மீது மென்மையான அணுகுமுறை கொண்டுள்ளது என்ற பாஜகவின் குற்றச்சாட்டிற்கு இதுவே வலுவான ஆதாரமாகும் என பாஜக தரப்பினர் கூறுகின்றனர்.
‘Diya Sharma’, ‘Yashita Nagpal’ என்ற பெயர்களில் பாகிஸ்தானில் இருந்து திறக்கப்பட்ட கணக்குகள், நீண்ட நாட்களாக பாஜக மற்றும் மத்திய அரசுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தி வந்துள்ளன. குறிப்பாக ‘Yashita Nagpal’ கணக்கில் வெளியான சமீபத்திய பதிவு அனைத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது.
“About This Account” அறிமுகமானதும் அந்தக் கணக்கில், காங்கிரஸின் ஆன்லைன் பிரச்சாரத்திற்காக தான் பணியமர்த்தப்பட்டேன்; புதிய அம்சம் வருவதற்கு முன் என் லொக்கேஷன் மாற்றிவிட்டது ஒரு அதிர்ஷ்டம் என்ற தகவலும் இடம்பெற்றுள்ளது. ஆனால் அக்கவுண்டு உருவாக்கப்பட்ட இடம் பாகிஸ்தான் எனத் தெளிவாகக் காட்டப்பட்டதால் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த விவகாரத்தை முன்னிட்டு பாஜக தரப்பில் தொடர்ச்சியாக கண்டனங்கள் எழுந்து வருகின்றன. பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் நாட்டின் இம்சையை குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்.
இந்து மதத்திற்கு எதிராகவும், சமூகப் பிளவை ஏற்படுத்தும் வகையிலும், காங்கிரஸுக்குத் துணைபுரியும் வகையிலும் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து பதிவுகள் வந்துள்ளன என அவர் கூறியுள்ளார்.
பாஜகவின் பிரிதி காந்தி உட்பட பலர், காங்கிரஸ் ஆதரவாளர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுவிட்டதாக விமர்சித்து வருகிறார்கள்.
இதற்கிடையில், காங்கிரஸ் உயர் தலைமையகம் இந்த சர்ச்சைக்குக் எப்படி பதிலளிக்கப் போகிறது என்பது அரசியல் வட்டாரங்களில் ஆவலாகக் கண்காணிக்கப்படுகிறது.