இஸ்ரேலை தாக்கியதைப் போலவே, ஐரோப்பாவின் பல நாடுகளிலும் ஹமாஸ் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தது என்ற செய்தி வெளிச்சமிட்டுள்ளது. இதில் சில திட்டங்கள் ஆரம்பத்திலேயே தடுக்கப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாலஸ்தீனத்தை மீண்டும் ஒரே தேசமாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் செயல்பட்டு வரும் குழுவே ஹமாஸ். “இஸ்ரேல், காசா, மேற்குக் கரை போன்ற அனைத்து நிலங்களும் ஒருகாலத்தில் பாலஸ்தீனத்தின் பகுதிகளே. எனவே அவை அனைத்தையும் மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும்” என்பது அந்த இயக்கத்தின் நோக்கம். இந்த இலக்குடன் 2023 ஆம் ஆண்டு அவர்கள் இஸ்ரேலை தாக்கியதுதான் உலகம் கண்ட பெரும் மோதலாக இரண்டாண்டுகள் நீண்டு பின்னர் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில்தான், ஹமாஸ் உலகின் பிற பகுதிகளிலும் தாக்குதல் நடத்த முயன்றதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
யூதர்கள் அதிக அளவில் வசிக்கும் எந்த ஐரோப்பிய நகராக இருந்தாலும், அதனை இலக்காகக் கொண்டு ஹமாஸ் தனி ரகசிய பிரிவை அமைத்து திட்டமிட்டிருந்ததாக இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் கூறியுள்ளது. ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, ஹங்கேரி போன்ற நாடுகள் அதிகபட்ச யூதர் தொகுதியை கொண்டுள்ளன. எனவே இந்த நாடுகளின் மீதும் தாக்குதல் திட்டங்கள் இருந்ததாக மொசாட் தகவல் வழங்கியுள்ளது.
கடந்த செப்டம்பரில் ஆஸ்திரியாவின் வியன்னாவில் நடைபெற்ற விசாரணையில், சட்டவிரோத ஆயுதகிடங்கு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில் துப்பாக்கிகள், வெடிபொருட்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் குவிக்கப்பட்டிருந்தன. இந்த கிடங்குடன் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவரான பஸ்ஸம் நைமின் மகன் முகமது நைம் தொடர்புடையவர் என விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, ஐரோப்பா முழுவதும் ஹமாஸ் செயல்பாடுகள் குறித்து விசாரணை தீவிரமானது. பல நாடுகளில் ஒரே நேரத்தில் பாதுகாப்புப் படைகள் சோதனை நடத்தி, அங்கு இருந்த ஆயுதங்களையும், ஹமாஸ் தொடர்புடையதாக சந்தேகப்படும் பலரையும் கைது செய்தனர்.
இந்த விவரங்களை அனைத்தையும் மொசாட் இப்போது பொது அறிவாக வெளியிட்டுள்ளது. இதன் பின்னர், ஐரோப்பிய நாடுகள் முழுவதும் ஹமாஸ் ஆதரவு குழுக்கள்மீது கண்காணிப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜெர்மனி, ஹமாஸ் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும் அறக்கட்டளைகள் மற்றும் மத அமைப்புகளிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
ஐரோப்பாவில் நடக்க இருந்த பல தாக்குதல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுவிட்டதாகவும், இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கிய தருணத்திலேயே இந்த அந்நியத் தாக்குதல் திட்டங்கள் நடந்து கொண்டிருந்ததாகவும் மொசாட் தெரிவித்துள்ளது.
ஆனால், மொசாட் முன்வைத்துள்ள இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஹமாஸ் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.