ஜம்மு காஷ்மீரில் நவ்காம் காவல் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பு எதிர்பாராததாகும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஜம்மு காஷ்மீர் பிரிவு இணை செயலாளர் பிரசாந்த் லோகண்டே தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நவ்காம் காவல் நிலையம் சமீபத்தில் மிகப்பெரிய வெடிகுண்டுகள் தொகுதியை கைப்பற்றியது. இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட தகவல் அறிக்கை 162/2025 அடிப்படையில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. கைப்பற்றப்பட்ட வெடிப்பொருட்கள் மற்றும் ரசாயனங்கள் வழக்கம்போல காவல்நிலையத்தில் திறந்தவெளியில் சேமிக்கப்பட்டிருந்தன.
விசாரணைக்கு ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் கடந்த இரண்டு நாட்களாக SOP-ஐ பின்பற்றி மேலாண்மை செய்து, தடயவியல் மற்றும் வேதியியல் பரிசோதனைகள் நடத்தி வந்தனர்.
எதிர்பாராத வகையில், வெள்ளிக்கிழமை அந்த வெடிப்பொருட்கள் வெடித்தன. இதில் 9 பேர் உயிரிழந்தனர், மேலும் 27 காவலர்கள், 2 வருவாய் அதிகாரிகள் மற்றும் 3 பொதுமக்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் உடனடியாக சேர்க்கப்பட்டனர்.
இந்த வெடிப்பு காவல் நிலைய கட்டிடத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது; அருகிலுள்ள பிற கட்டிடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. சேத அளவை மதிப்பிடும் ஆய்வுகள் நடப்பதில் உள்ளன. பொதுமகர்கள் தேவையற்ற ஊகங்களை தவிர்க்குமாறு அறிவிக்கப்படுகிறார்கள். இச்சோகம் நேரத்தில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு முழுமையான ஆதரவை வழங்குகிறது, காயமடைந்தவர்களுக்கு விரைவில் மருத்துவ உதவிகள் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஜம்மு காஷ்மீர் டிஜிபி நளின் பிரபாத் கூறியதாவது, “மாநில புலனாய்வு அதிகாரி ஒருவர், மூன்று தடயவியல் ஆய்வக அதிகாரிகள், இரண்டு குற்றப்பிரிவு அதிகாரிகள், இரண்டு வருவாய் அதிகாரிகள் மற்றும் குழுவுடன் தொடர்புடைய ஒரு தையல்காரர் உயிரிழந்தனர். 27 காவல்துறை அதிகாரிகள், 2 வருவாய் அதிகாரிகள் மற்றும் 3 பொதுமக்கள் காயமடைந்தனர்.
வெடிகுண்டுகள் மிகவும் எச்சரிக்கையுடன் கையாளப்பட்டிருந்தன. இருப்பினும், வெள்ளிக்கிழமை இரவு 11.20 மணிக்கு தற்செயலாக இந்த வெடிப்பு நிகழ்ந்தது. இதற்கான காரணம் தொடர்பாக வேறு ஊகங்களைச் சொல்ல தேவையில்லை” என அவர் குறிப்பிட்டார்.