“விருதுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை… குப்பையில் வீசிவிடுவேன்” — நடிகர் விஷால் ஆவேசம்!
நடிகர் விஷால் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், “விருதுகளில் எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. விருதுகள் எல்லாம் பைத்தியக்காரத்தனம். ஒருவேளை நான் விருது வாங்கினால், போகும் வழியிலேயே குப்பைத் தொட்டியில் வீசிவிடுவேன்!” என்று திறமையாக தெரிவித்துள்ளார்.
சமீபத்திய ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய அவர் மேலும் கூறியதாவது:
“எனக்கு விருதுகளில் நம்பிக்கை இல்லை. விருதுகள் எல்லாம் வெறும் பிம்பம். நான்கு பேர் உட்கார்ந்து கொண்டு 8 கோடி பேருக்குப் பிடித்த நடிகர் யார், எது சிறந்த படம் என்று முடிவு செய்கிறார்கள் — அவர்கள் என்ன மேதாவிகளா? இதிலே நான் தேசிய விருதுகளையும் சேர்த்தே சொல்கிறேன்.
மக்கள் சர்வே தான் உண்மையான அளவுகோல். நீங்கள் யாரை சிறந்த நடிகர் என்று முடிவு செய்கிறீர்கள்? அதற்கு எனக்கு நம்பிக்கை கிடையாது. எனக்கு விருது கிடைக்கவில்லை என்பதற்காக நான் இப்படி சொல்கிறதில்லை. ஆனால் அந்த முழு முறையின் நியாயத்தில்தான் எனக்கு நம்பிக்கை இல்லை.”
அவர் மேலும் கடுமையாக கூறினார்:
“ஒருவேளை நான் விருது வாங்கினால், போகும் வழியிலேயே குப்பைத் தொட்டியில் வீசிவிடுவேன். அது தங்கமாக இருந்தால், அதை அடகு வைத்து அந்தப் பணத்தை அன்னதானத்துக்குப் பயன்படுத்தி விடுவேன். அது தான் என் எண்ணம். ஆனால் இதே பார்வை மற்றவர்களுக்கும் இருக்க வேண்டும் என்பதில்லை. அவர்களுக்கு விருதுகள் பெருமை எனப் பட்டால் அது அவர்களுடைய விருப்பம்.”
தற்போது விஷால் நடித்துவரும் படம் ‘மகுடம்’. இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. ஆனால் இந்தப் படத்தின் தொடக்க கட்டத்திலேயே விஷால் மற்றும் இயக்குநர் ரவி அரசு இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. சில காட்சிகளை விஷாலே இயக்கியதாகத் தகவல்கள் வெளியானன. பின்னர் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் முயற்சியால் இருவருக்கும் இடையே பிரச்சனை சமாதானப்படுத்தப்பட்டது.
ஆனால் பின்னரும் சில கருத்து முரண்பாடுகள் நீடித்ததால், தற்போது ‘மகுடம்’ படத்தின் முழு இயக்குநர் பொறுப்பையும் விஷாலே ஏற்றுள்ளார். கதை, திரைக்கதை மற்றும் வசன எழுத்தாளராக மட்டும் ரவி அரசுவின் பெயர் இடம்பெற இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.