“விவசாயத்திற்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்பு தரும் துறை!” – 2030-க்குள் சுற்றுலாத்துறை நாட்டின் ஜிடிபியில் 7%-ஐத் தாண்டும்: மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தகவல்!
புதுடெல்லி:
இந்திய நாட்டின் சுற்றுலாத்துறை அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டு வருவதாகவும், வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுற்றுலாத்துறையின் பங்களிப்பு 7 சதவீதத்தை எளிதாகத் தாண்டிவிடும் என்றும் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்துப் பேசிய அவர், கடந்த 2023 – 24ஆம் நிதியாண்டின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, நாடு முழுவதும் சுற்றுலாத்துறை மூலமாக மட்டுமே சுமார் 8.4 கோடி (84 மில்லியன்) பேர் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளைப் பெற்றுப் பயனடைந்துள்ளனர் என்ற மிக முக்கியமான விபரத்தை வெளியிட்டார்.
தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர், இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம் மிக வேகமாக முன்னேறி வரும் வேளையில், அதற்கு இணையாக உள்நாட்டு மற்றும் ஆன்மீகச் சுற்றுலாவுக்கான தேவையும் நாளுக்கு நாள் பன்மடங்கு அதிகரித்து வருகிறது என்று குறிப்பிட்டார். இந்த அதிரடி மாற்றங்களால், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் நாட்டின் முதன்மைத் துறையான விவசாயத் துறைக்கு அடுத்தபடியாகச் சுற்றுலாத்துறை உருவெடுக்கும் என்றும், பொருளாதாரப் பங்களிப்பில் இது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) துறையையே பின்னுக்குத் தள்ளும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், இந்தியாவின் ‘இன்க்ரெடிபிள் இந்தியா’ (Incredible India) தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு பகுதியாக, வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 10 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயித்து மத்திய அரசு தீவிர உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தனது பேட்டியில் உறுதியளித்துள்ளார்.





