மனஅழுத்தத்தை குறைக்கும் பயிற்சி: மகளிர் சுயஉதவிக் குழுவினருக்காக மாநிலளவில் திட்டம்
மகளிரின் மனஅழுத்தத்தை குறைத்து, மனநலத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மாநிலம் முழுவதும் சிறப்பு பயிற்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.
அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:
மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களின் மன ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வை மேம்படுத்தும் முயற்சியாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள 37 மாவட்டங்களின் 388 வட்டாரங்கள் மற்றும் 12,525 ஊராட்சிகளில் செயல்படும் 3.31 லட்சம் சுயஉதவிக் குழு பிரதிநிதிகளுக்கு மனநல விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்படுகிறது.
அத்துடன், 16,562 பள்ளிகள் மற்றும் 1,602 கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் மனநலம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
பயிற்சிகளில் —
- மனநலம் மற்றும் மனநோய் குறித்த அடிப்படை விழிப்புணர்வு,
- தற்கொலை தடுப்பு வழிமுறைகள்,
- சமூக மனநலம்,
- மனநலம் தொடர்பான சட்டங்கள் மற்றும் அரசுத் திட்டங்கள்,
- போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்,
- வளரிளம் பெண்கள், மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் முதியோருக்கான மனநல இடையீடுகள் பற்றிய விளக்கங்கள் — ஆகியவை இடம்பெறுகின்றன.
இத்திட்டம், மகளிரின் மன உறுதியையும், சமூக ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் நோக்கில் மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.