“மகளிர் இடஒதுக்கீடு ஜனநாயகத்தின் வலிமை” – நாடாளுமன்றத்தில் ஆதரவு கோருகிறார் பிரதமர் மோடி!
சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தற்போதைய காலத்தின் கட்டாயம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாகத் தனது எக்ஸ் (X) வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் ஏற்படும் ஒவ்வொரு தாமதமும் துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த முடிவைத் தாமதப்படுத்துவது என்பது நமது நாட்டின் ஜனநாயக வலிமையைத் தாமதப்படுத்துவதற்குச் சமம் என்று தெரிவித்த பிரதமர், “பெண்கள் முன்னேறும்போதுதான் ஒட்டுமொத்த சமூகமும் முன்னேறுகிறது” எனத் தெரிவித்துள்ளார். இந்திய மக்கள் தொகையில் பாதி அளவு உள்ள பெண்களின் பங்களிப்பு தேசத்தின் வளர்ச்சிக்கு மகத்தானது என்றும்; அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு, இசை மற்றும் கலை என அனைத்துத் துறைகளிலும் பெண்கள் இன்று முன்னணியில் திகழ்வதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ‘மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா’ வரலாற்றுச் சிறப்புமிக்கது எனக் குறிப்பிட்ட பிரதமர், கட்சிப் பாகுபாடின்றி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு ஒருமனதாக ஆதரவளிக்க வேண்டும் என உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமரின் இந்தப் பதிவு நாடு முழுவதும் உள்ள பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.






