“ரயில்களைப் பயன்படுத்த வேண்டாம்” – ஈரானியர்களுக்கு இஸ்ரேல் ராணுவம் அவசர எச்சரிக்கை!
டெஹ்ரான்:
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானிய மக்கள் அடுத்த 12 மணி நேரத்திற்கு ரயில்கள் மற்றும் ரயில் பாதைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உயிருக்கு ஆபத்து – இஸ்ரேலின் நேரடி எச்சரிக்கை
இஸ்ரேல் ராணுவம் தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் பாரசீக மொழியில் வெளியிட்டுள்ள பதிவில்,
“ஈரான் நேரப்படி இரவு 9 மணி (இந்திய நேரப்படி இரவு 11 மணி) வரை மக்கள் ரயில்களில் பயணிப்பதையோ அல்லது ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் செல்வதையோ தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மீறினால் அது உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும்,” எனத் தெரிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கையில் குறிப்பிட்ட இடங்கள் ஏதும் சுட்டிக்காட்டப்படாமல், ஈரான் முழுவதற்குமான பொதுவான அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இறுதி எச்சரிக்கையும் பின்னணியும்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விதித்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கான காலக்கெடு இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணியுடன் முடிவடைகிறது. “காலக்கெடுவுக்குப் பிறகு ஈரானில் மின் நிலையங்களோ, பாலங்களோ எஞ்சியிருக்காது; நாடு கற்காலத்திற்குத் தள்ளப்படும்” என்று ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, தற்போது இஸ்ரேல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
போர்ச் சூழல்
பிப்ரவரி 28 முதல் நீடிக்கும் இந்தப் போரில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் ஈரானின் இலக்குகளைத் தாக்கி வருகின்றன. பதிலுக்கு ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, உலக கச்சா எண்ணெய் விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது.
இஸ்ரேலின் இந்த ரயில் போக்குவரத்து எச்சரிக்கை, அடுத்த சில மணி நேரங்களில் ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது மிகப்பெரிய வான்வழித் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது குறித்து ஈரான் தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.






