பங்கர் பஸ்டர் குண்டுகள் மூலம் ஈரானின் அணுசக்தி தளம் தகர்ப்பு: அதிபர் ட்ரம்ப் வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு!
ஈரானின் இஸ்பஹான் (Isfahan) பகுதியில் அமைந்துள்ள அந்நாட்டின் மிகப்பெரிய ஆயுதக் கிடங்கு மற்றும் அணு ஆராய்ச்சி மையங்களைக் குறிவைத்து, அமெரிக்கா 1,000 கிலோ எடையுள்ள சக்திவாய்ந்த ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகளை வீசி அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார். ஈரான் அணுஆயுதத் தயாரிப்பில் ஈடுபடுவதைத் தடுக்க இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய இராணுவத் தாக்குதல், தற்போது 30 நாட்களைக் கடந்து தீவிரமடைந்துள்ளது. அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஈரான் பணியாத பட்சத்தில், அந்நாட்டின் கார்க் தீவு, மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எண்ணெய் கிணறுகள் முற்றிலுமாகத் தகர்க்கப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், சர்வதேச எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க ஈரான் முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான இஸ்பஹான் பகுதி ஈரானின் அணுசக்தித் திட்டத்தின் இதயப் பகுதியாகக் கருதப்படுகிறது. இங்கு நிலத்தடியில் அமைந்துள்ள நடன்ஸ் செறிவூட்டல் தளம், அணு ஆராய்ச்சி மையங்கள் மற்றும் போர் விமானப் பராமரிப்பு நிலையங்கள் என ஈரானின் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான முக்கிய கட்டமைப்புகள் உள்ளன. குறிப்பாக, கடந்த ஜூன் மாதம் செயற்கைக்கோள் படங்கள் மூலம் அணுசக்தி நிலையத்திற்கு 60 சதவீதத் தூய்மையுடன் கூடிய செறிவூட்டப்பட்ட யுரேனியம் கொண்டு செல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா இந்த இலக்குகளைத் தேர்வு செய்துள்ளது. ஏற்கனவே 12 நாட்கள் போரில் சேதமடைந்த இந்தத் தளம், தற்போது மீண்டும் 1,000 கிலோ எடையுள்ள குண்டுகளால் தாக்கப்பட்டுள்ளதால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 32-வது நாளை எட்டியுள்ள இந்தப் போர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் தற்போது மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது.




