திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயில் பங்குனித் திருவிழா: பக்திப் பெருக்கோடு நடைபெற்ற பிரம்மாண்ட தேரோட்டம்!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அமைந்துள்ள அருள்மிகு புஷ்பவனேஷ்வரர் சமேத சௌந்தரநாயகி அம்மன் திருக்கோயிலில், இந்த ஆண்டுக்கான பங்குனிப் பெருந்திருவிழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று சிகர நிகழ்ச்சியான தேரோட்ட வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.
திருவிழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமியும் அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவின் உச்சகட்டமாக, இன்று அதிகாலையில் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் பிரியாவிடை தாயாருடன் புஷ்பவனேஷ்வரரும், மற்றொரு சிறிய தேரில் சௌந்தரநாயகி அம்மனும் எழுந்தருளினர்.
மேள தாளங்கள் முழங்க, சிவவாத்தியங்கள் இசைக்க நான்கு ரத வீதிகள் வழியாகத் தேர்கள் பவனி வந்தன. வழிநெடுகிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் “தென்னாடுடைய சிவனே போற்றி” எனப் பக்தி முழக்கமிட்டு, தேரை வடம் பிடித்து இழுத்துச் சாமி தரிசனம் செய்தனர். சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த பக்தர்களால் திருப்புவனம் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.





