நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை தொடக்கம்: 16 மொழிகளில் பிரத்யேக வசதி!
இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிந்தைய எட்டாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு, நாட்டின் முதல் டிஜிட்டல் கணக்கெடுப்பாக நாளை முதல் தொடங்கவுள்ளது. இம்முறை ஆன்லைன் மற்றும் நேரடி முறை என இரு கட்டங்களாகப் பணிகள் நடைபெறவுள்ளன. இதற்காக தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட 16 மொழிகளில் பிரத்யேக இணையதளம் மற்றும் மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் விவரங்களை இணையதளம் வாயிலாகப் பதிவு செய்ய ‘சுய விபரம்’ என்ற புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, ஜூலை 17ஆம் தேதி முதல் பொதுமக்கள் தங்கள் சுய விவரங்களை ஆன்லைனில் பதிவிடலாம் என மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
இணையதளம் அல்லது செயலி மூலம் விவரங்களைப் பதிவு செய்பவர்களுக்கு 16 இலக்க அடையாள எண் வழங்கப்படும். கணக்கெடுப்பாளர்கள் வீட்டிற்கு நேரில் வரும்போது இந்த 16 இலக்க எண்ணை மட்டும் வழங்கினால் போதுமானது; வேறு எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. முதல் கட்டத்தில் வீடுகள் மற்றும் வீட்டுவசதி குறித்த விவரங்களும், இரண்டாம் கட்டத்தில் சாதி, மதம் குறித்த தரவுகளும் சேகரிக்கப்பட உள்ளன. பொதுமக்கள் அளிக்கும் அனைத்துத் தகவல்களும் ‘என்கிரிப்ட்’ (Encrypt) செய்யப்பட்டு பாதுகாப்பான சர்வரில் சேமிக்கப்படும் என்பதால் தரவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.






