“அழிவுக்கானச் செலவில் ஒரு சிறு பகுதியை ஒதுக்கினால் பசி என்ற சொல்லே இருக்காது” – தொழிலதிபர் ஹர்ஷ் கோயெங்கா உருக்கம்!
உலக நாடுகள் ஆயுதங்களுக்காகவும் போருக்காகவும் வாரி இறைக்கும் தொகையில் ஒரு சிறு பகுதியை ஒதுக்கினால் கூட, இந்த உலகில் ‘பசி’ என்ற சொல்லே இருக்காது என்று பிரபல தொழிலதிபர் ஹர்ஷ் கோயெங்கா மிகுந்த மனவேதனையுடன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனதை உலுக்கும் வீடியோ:
கொட்டும் மழையிலும், நடுங்கும் குளிரிலும் ஒரு வேளை உணவிற்காகச் சிறு குழந்தைகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நெஞ்சை உருக்கும் காட்சியை அவர் பகிர்ந்துள்ளார். இந்த உலகத்தின் முன்னுரிமைகள் தவறாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதை இந்த வீடியோ சுட்டிக்காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுதப் போட்டியும் பசிப் பிணியும்:
உலக வல்லரசுகளும் வளர்ந்து வரும் நாடுகளும் தங்களது அதிகாரம் மற்றும் ஆதிக்கத்தை நிலைநாட்ட நவீன ஏவுகணைகள், போர் விமானங்கள் மற்றும் அணு ஆயுதங்களுக்காகப் பெரும் பொருளாதாரத்தை வாரி இறைக்கின்றன. இவ்வாறு அழிவுக்காகச் செலவிடப்படும் இந்தத் தொகையானது, ஒரு நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போர் நடக்கும் நாடுகளில் குண்டுகளுக்குப் பயந்து ஓடும் மக்களை விட, ஒரு வேளை உணவின்றிப் பசியால் மெல்ல மெல்லச் சாகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பெரும் சோகமாகும் என்று ஹர்ஷ் கோயெங்கா தனது பதிவில் கவலை தெரிவித்துள்ளார். அழிவை விட மனித உயிர்களைக் காப்பதற்கே உலக நாடுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதே அவரது இந்தப் பதிவின் சாரமாக அமைந்துள்ளது.









