கிருஷ்ணகிரியில் ராம நவமி விழா: 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு ரோஜா மலர் அபிஷேகம் – திரளான பக்தர்கள் தரிசனம்!
கிருஷ்ணகிரி:
ராம நவமிப் பெருவிழாவையொட்டி கிருஷ்ணகிரி அருகே உள்ள ஒசபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சீதா சமேத ஸ்ரீ ராமர் கோயிலில் சிறப்புப் பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக, கோயில் வளாகத்தில் உள்ள 32 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சுவாமிக்கு ரோஜா மலர்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
ராம நவமியை முன்னிட்டு அதிகாலை முதலே மூலவர் ராமருக்குச் சிறப்பு அலங்காரங்கள் மற்றும் தீபாராதனைகள் காட்டப்பட்டன. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆஞ்சநேயர் சுவாமிக்கான மலர் அபிஷேகத்தைக் காணக் கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டனர். பக்தர்களின் கோஷங்களுக்கு இடையே நடைபெற்ற இந்த வண்ணமயமான அபிஷேக விழாவிற்குப் பிறகு, அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பக்தர்களின் வருகையையொட்டி கோயில் நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.










