இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: ஈரான் கடற்படை தளபதி அலிரேசா டங்சிரி கொல்லப்பட்டதாகத் தகவல்!
ஈரானின் ஹோர்முஸ் ஜலசந்தியைத் தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்த அந்நாட்டின் கடற்படை தளபதி அலிரேசா டங்சிரி, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) கடற்படைத் தளபதியாக கடந்த 2018-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த இவர், வளைகுடா பிராந்தியத்தில் ஈரானின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதில் மிக முக்கியப் பங்கு வகித்தவர். குறிப்பாக, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தியை முடக்கி வைத்திருந்த இவரது படைகளால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் கடும் உயர்வு ஏற்பட்டது.
அமெரிக்காவுடன் தொடர்புடைய எண்ணெய் வயல்கள் மற்றும் ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என கடந்த வாரம் இவர் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது இந்தத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஈரானின் பந்தர் அப்பாஸ் பகுதியில் இஸ்ரேல் படைகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் அலிரேசா டங்சிரி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மேற்காசியாவில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஈரானின் மிக உயரிய ராணுவ அதிகாரிகளில் ஒருவரான இவர் கொல்லப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.










