ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் அதிரடி மாற்றம்: மாநிலங்கள் நீக்கப்பட்டு 80 கோட்டங்களாகப் பிரிப்பு
ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அதன் நிர்வாகக் கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஹரியானாவில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பொதுக்குழு கூட்டத்தில், பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். புதிய மாற்றத்தின்படி, ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பிலிருந்து ‘மாநிலங்கள்’ என்ற பிரிவு நீக்கப்பட்டு, ஒட்டுமொத்த இந்தியாவும் 80 கோட்டங்களாகப் (Divisions) பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய கட்டமைப்பில், நான்கு முதல் ஆறு கோட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ‘பிரதேசம்’ என்று அழைக்கப்படும். அதேசமயம், ஏற்கனவே நடைமுறையில் உள்ள ‘விபாக்’ மற்றும் ‘ஷேத்ரம்’ ஆகிய பிரிவுகள் தொடர்ந்து நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, தமிழகம் ஆறு கோட்டங்களாகப் பிரிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக, மாநிலத் தலைவர், மாநிலச் செயலாளர் மற்றும் மாநில அமைப்பாளர் போன்ற பொறுப்புகள் இனி கோட்டத் தலைவர், கோட்டச் செயலாளர் மற்றும் கோட்ட அமைப்பாளர் எனப் பெயர் மாற்றம் பெறுகின்றன. நிர்வாக வசதிக்காகவும், இயக்கத்தின் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.








