ஈரானின் ‘ட்ரோன்’ போர் உத்தி: இந்திய பாதுகாப்புத்துறையில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள் – சிறப்புத் தொகுப்பு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நவீன ராணுவ வலிமைக்கு எதிராக ஈரான் கையாண்டு வரும் மலிவுவிலை ட்ரோன் போர் உத்தி தற்போது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, 20,000 முதல் 50,000 டாலர் மதிப்பில் தயாரிக்கப்படும் ஈரானின் ‘ஷாஹெட்’ (Shahed) ரக ட்ரோன்களை வீழ்த்த, அமெரிக்கா 40 லட்சம் டாலர் மதிப்புள்ள ‘பேட்ரியாட்’ ஏவுகணைகளைச் செலவிட வேண்டியுள்ளது. இந்த நிதி ரீதியான நெருக்கடியும், ரேடார்களில் சிக்காமல் மிகக் குறைந்த உயரத்தில் கூட்டமாக (Swarm) வந்து தாக்கும் ஈரானின் நுட்பமும் இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகளை ஆலோசிக்க வைத்துள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, பெரும் செலவில் ஏவுகணைகளை ஏவுவதை விட, உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் மலிவுவிலை தற்கொலைப்படை ட்ரோன்களைப் பயன்படுத்துவது அதிக லாபகரமானது என இந்தியா கருதுகிறது.
இதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் முன்னணி பாதுகாப்பு நிறுவனங்கள் அதிநவீன ட்ரோன் தயாரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளன. பெங்களூருவின் தேசிய விண்வெளி ஆய்வகத்துடன் இணைந்து சோலார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 1000 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் ட்ரோன்களை உருவாக்கி வருகிறது. அதேபோல், ஹைதராபாத்தின் விஇஎம் டெக்னாலஜிஸ் ‘சேஸர்’ (Chaser) எனப்படும் ஏரோடைனமிக் தற்கொலைப்படை ட்ரோன்களையும், நொய்டாவின் ஐஜி ட்ரோன்ஸ் (IG Drones) நிறுவனம் 5 மணிநேரம் வரை பறந்து இலக்கைத் தாக்கும் ‘டெல்டா விங்’ ரக ட்ரோன்களையும் தயாரித்து வருகின்றன. ஏற்கனவே ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் ட்ரோன்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த மத்திய அரசு, தற்போது ஈரானின் போர் உத்தியை முன்மாதிரியாகக் கொண்டு, உள்நாட்டு ட்ரோன் உற்பத்தி மற்றும் அது தொடர்பான ஆய்வுகளுக்கு முன்னுரிமை அளித்து ராணுவத்தை நவீனமயமாக்கி வருகிறது.