நாடு முழுவதும் அதிரடி வேட்டை: பதுக்கி வைக்கப்பட்ட 15,000 சிலிண்டர்கள் பறிமுதல் – மத்திய அரசு அதிரடி!
புது தில்லி: நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கப்படுவதைத் தடுக்க மத்திய அரசு மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கையில், இதுவரை சுமார் 15,000 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எரிவாயு விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற வதந்திகளால் உருவான கறுப்புச் சந்தை விற்பனையைத் தடுக்க இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
12,000 இடங்களில் மெகா சோதனை
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் சுஜாதா சர்மா டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கப்படுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுமார் 12,000 இடங்களில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டன. இந்தச் சோதனைகளின் முடிவில், விதிமுறைகளை மீறி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15,000 சிலிண்டர்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.”
தொடரும் கண்காணிப்பு
சிலிண்டர் விநியோகத்தில் முறைகேடுகளைத் தவிர்க்க, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், எல்பிஜி விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லரை விற்பனை நிலையங்களிலும் தொடர்ந்து சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். முறையான விநியோகத்தை உறுதி செய்யவும், கறுப்புச் சந்தையில் சிலிண்டர்கள் விற்கப்படுவதைத் தடுக்கவும் மத்திய அரசு உறுதியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.