யூடிஎஸ் (UTS) செயலி முடக்கம்: மார்ச் முதல் ‘ரயில் ஒன்’ செயலிக்கு மாற ரயில்வே அதிரடி உத்தரவு!
புதுடெல்லி: இந்திய ரயில்வேயில் சாதாரண ரயில் பயணச்சீட்டுகளைப் பெறப் பயன்பட்டு வந்த யூடிஎஸ் (UTS) செயலி வரும் மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக, அனைத்து ரயில்வே சேவைகளையும் ஒரே இடத்தில் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘ரயில் ஒன்’ (Rail One) செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு பயணிகளுக்கு இந்திய ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
ரயில் பயணிகளுக்கான ஒரு ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளமாக ‘ரயில் ஒன்’ செயலியை முன்னிலைப்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக, வரும் மார்ச் மாதம் முதல் யூடிஎஸ் செயலியில் புதிய பயணச்சீட்டு முன்பதிவு செய்தல், சீசன் டிக்கெட் புதுப்பித்தல் மற்றும் புதிய பயனாளர் பதிவு ஆகிய முக்கியச் சேவைகள் அனைத்தும் முடக்கப்படும்.
பயணிகள் இனி தங்களின் முன்பதிவில்லா பயணச்சீட்டுகள் மற்றும் இதர ரயில்வே சேவைகளைப் பெற ‘ரயில் ஒன்’ செயலியை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியிருக்கும். எனவே, பயணத் தடங்கல்களைத் தவிர்க்கும் பொருட்டு, பயணிகள் அனைவரும் உடனடியாகப் புதிய செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு ரயில்வே துறை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த அதிரடி மாற்றத்தால் ரயில் பயணச்சீட்டு வழங்கும் முறை மேலும் எளிமையாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.