விமான நிலையங்கள் 160 ஆக அதிகரிப்பு: திருப்பதி தேவஸ்தான தொழில்நுட்பத்தைப் பின்பற்ற மத்திய அமைச்சர் திட்டம்!
திருப்பதி ஏழுமலையானைத் தரிசனம் செய்த பிறகு, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு திருமலை தேவஸ்தானத்தின் அதிநவீன AI தொழில்நுட்பத்துடன் கூடிய ‘கமாண்ட் கண்ட்ரோல் சென்டரை’ நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் விமான நிலையங்களின் எண்ணிக்கை 74-லிருந்து 160 ஆக உயர்ந்துள்ளதாகப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
திருப்பதி தேவஸ்தானத்தில் கூட்ட நெரிசலைக் கையாளவும், பாதுகாப்பிற்காகவும் பயன்படுத்தப்படும் அதிநவீனத் தொழில்நுட்பத்தை விமானத் துறையிலும் புகுத்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதன் மூலம், நாட்டின் அனைத்து விமான நிலையங்களையும் ஒரே இடத்திலிருந்து கண்காணிக்கும் வகையில் ஒரு கமாண்ட் கண்ட்ரோல் சென்டரை அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய தொழில்நுட்ப மாற்றங்கள் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சேவையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.