டெல்லிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்: செங்கோட்டை மற்றும் சாந்தினி சௌக் பகுதிகளில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிப்பு!
பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு, தலைநகர் டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, டெல்லி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாகச் செங்கோட்டை, சாந்தினி சௌக் மற்றும் அங்குள்ள முக்கியக் கோயில்களைப் பயங்கரவாதிகள் கண்காணித்து வருவதாகப் புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
கடந்த 6-ம் தேதி பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மசூதியில் நடந்த குண்டுவெடிப்புக்குப் பழிவாங்கும் நோக்கில், இந்தியாவில் பெரிய அளவிலான தாக்குதலை நடத்த லஷ்கர்-இ-தொய்பா சதி செய்துள்ளதாகத் தெரிகிறது. சாந்தினி சௌக் பகுதியில் உள்ள ஒரு புகழ்பெற்ற கோயிலை இலக்காகக் கொண்டு வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள ‘பிரச்சின் கௌரி சங்கர் மந்திர்’ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர்கள் பொருத்தப்பட்டுத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சாந்தினி சௌக் பகுதி குறுகிய சந்துகளைக் கொண்ட பரபரப்பான வணிகப் பகுதி என்பதால், அங்குப் போலீஸார் கூடுதல் கவனத்துடன் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், டெல்லி எல்லைப் பகுதிகள் மற்றும் பழைய டெல்லி பகுதிகளில் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் அனைத்தும் தற்போது பாதுகாப்புப் படையினரின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன.