‘அரசன்’ படத்திலிருந்து விலகலா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஜய் சேதுபதி!
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்திலிருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகிவிட்டதாகச் சமூக வலைதளங்களில் பரவி வந்த தகவலுக்கு, அவரே நேரடியாக விளக்கம் அளித்துள்ளார். பிரபல இயக்குநர் வெற்றிமாறன், தனது முந்தைய வெற்றிப்படமான ‘வடசென்னை’ கதைக்களத்தின் அதே காலகட்டத்தை மையமாக வைத்து இந்தப் புதிய படத்தை உருவாக்கி வருகிறார். இதில் நடிகர் சிலம்பரசன் (STR) முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த பிரம்மாண்டமான கூட்டணியில் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா மற்றும் இயக்குநர் நெல்சன் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ளது. இந்நிலையில், பிஸியான கால்ஷீட் காரணமாக விஜய் சேதுபதி இப்படத்திலிருந்து விலகிவிட்டதாகச் செய்திகள் வெளியாகி ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, “வதந்திகள் மிக வேகமாகப் பரவுகின்றன” என்று கூறி, தான் படத்திலிருந்து விலகவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் ‘அரசன்’ படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது அதிகாரப்பூர்வமாகத் உறுதியாகியுள்ளது.