மும்பையில் பிரதமர் நரேந்திர மோடி–பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சந்திப்பு: 21 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
மும்பையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, இந்தியா–பிரான்ஸ் இடையே 21 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தனது மனைவி பிரிகேட் மேக்ரான் உடன் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மஹாராஷ்டிரா லோக்பவனில் பிரதமர் மோடியை சந்தித்த அவர், இருநாட்டு உறவு, பாதுகாப்பு, வர்த்தகம், செயற்கை நுண்ணறிவு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் முடிவில், பாதுகாப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக துறைகளில் 21 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மேக்ரான் வருகையையொட்டி, மும்பையில் உள்ள கேட்வே ஆப் இந்தியா பகுதியில் கண்கவர் லேசர் ஷோ நடத்தப்பட்டது. இரு நாடுகளின் கலாசார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி, அதிபர் மேக்ரான் மற்றும் உயர் அதிகாரிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
இதனிடையே, மும்பையில் பிரான்ஸ் அதிபர் பாலிவுட் திரையுலக பிரபலங்களை சந்தித்து உரையாடினார். நடிகர்கள் அனில் கபூர், மனோஜ் பாஜ்பாய், இயக்குநர்கள் சோயா அக்தர், நீரஜ் கெய்வான் மற்றும் கிராமி விருது பெற்ற ரிக்கி கேஜ் உள்ளிட்டோரை சந்தித்து கலந்துரையாடினார்.