எக்ஸ்பிரஸ் வேகத்தில் உள்கட்டமைப்பு வளர்ச்சி – முப்பரிமாண மாடலில் புதுப்பொலிவு பெறும் புவனேஷ்வர் ரயில் நிலையம்
ஒடிசா மாநிலத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்ற பின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, ரூ.415 கோடி மதிப்பீட்டில் புவனேஷ்வர் ரயில் நிலையம் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையமாக மாற்றப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
2024 மக்களவைத் தேர்தலுடன் நடைபெற்ற ஒடிசா சட்டசபைத் தேர்தலில் பாஜக ஆட்சியை அமைத்ததைத் தொடர்ந்து, முதல்வர் மோகன் சரண் மாஜி தலைமையில் தலைநகர் புவனேஷ்வரை முக்கிய நகரங்களின் தரத்துக்கு உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, தினசரி லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் புவனேஷ்வர் நிலையம் நவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மையமாக மாற்றப்படுகிறது. ரயில் நிலையத்துடன் பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகங்கள் இணைக்கப்பட்ட ‘மல்டி மாடல்’ கட்டமைப்பாக இது உருவாகிறது. இந்த திட்டம் நடப்பாண்டின் இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.
விமான நிலைய தரத்தில் வசதிகளை வழங்கும் நோக்கில், ஆறு நடைமேடைகளை இணைக்கும் 108 மீட்டர் நீள ஏர்-கான்கோர்ஸ் அமைக்கப்படுகிறது. மேலும், 34 மின்தூக்கிகள், 20 எஸ்கலேட்டர்கள், ஓய்வறைகள், உணவகங்கள் மற்றும் நவீன விற்பனை மையங்கள் இடம்பெறுகின்றன. 11 மாடி மேற்குப் பகுதி கட்டிடம், 3 மாடி கிழக்குப் பகுதி கட்டிடம், பசுமை வளாகம், மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் ஆகியவையும் திட்டத்தில் அடங்குகின்றன.
இடநெருக்கடி அதிகமுள்ள பகுதியில் முப்பரிமாண (3D) மாடல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே வளாகத்தில் ரயில் மற்றும் பேருந்து சேவைகள் இணைக்கப்படுவதால் பயணிகள் மாற்றுச் சேவைகளுக்கு எளிதாக மாறும் வசதி கிடைக்கும். பயண நேரத்தை குறைக்கும் வகையில் இந்த ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் நிறைவேறிய பின், புவனேஷ்வர் ஒடிசாவின் முக்கிய போக்குவரத்து மையமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.