பாகிஸ்தான்–மலேசிய உறவில் மாற்றக் காற்று
நீண்ட ஆண்டுகளாக பாகிஸ்தானுடன் நெருக்கமான தொடர்பை பேணியிருந்த மலேசியா, தற்போது இந்தியாவை முக்கிய கூட்டாளியாக அணுகத் தொடங்கியுள்ளது. உலக அரசியல் விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துவரும் தெளிவான மற்றும் திடமான நிலைப்பாடுகள் மலேசியாவை ஈர்த்துள்ளன. இதன் விளைவாக, இஸ்லாமாபாத் மீது இருந்த சார்பு மெதுவாக குறைந்து வருகிறது.
1957 முதல் மலேசியா–பாகிஸ்தான் உறவு பல துறைகளில் வலுவாக நிலைத்திருந்தது. பாதுகாப்பு ஒத்துழைப்பு முதல் வர்த்தக தொடர்புகள் வரை பல்வேறு தளங்களில், இந்தியாவை விட பாகிஸ்தானுக்கு மேலாதிக்கம் அளிக்கப்பட்டது. குறிப்பாக காஷ்மீர் பிரச்சினையில், பாகிஸ்தானின் கருத்துக்கு மலேசியா வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தது. ஐக்கிய நாடுகள் அமைப்பில் கூட இந்தியாவை விமர்சித்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, ஐநா மேடையில் பாகிஸ்தானுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) குறித்து சர்ச்சை எழுந்தபோது, அது முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கை எனக் குற்றம்சாட்டி மலேசியா கடுமையான கருத்துக்களை வெளியிட்டது. அப்போது இருநாடுகளுக்கும் இடையே உறவில் பதற்றம் நிலவியது.
ஆனால் தற்போதைய சூழலில், பாகிஸ்தானின் செயல்பாடுகளை மீளாய்வு செய்த மலேசியா, இந்தியாவுடன் நெருக்கத்தை வளர்க்க முனைந்துள்ளது எனக் கூறப்படுகிறது. இதன் பிரதிபலிப்பாக பிரதமர் மோடியின் மலேசியப் பயணம் பார்க்கப்படுகிறது. மோடியும், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமும் நடத்திய கலந்துரையாடல்கள் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தியதாக மதிக்கப்படுகிறது.
குறிப்பாக பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான அணுகுமுறைக்கு மலேசியாவும் ஆதரவு தெரிவித்துள்ளது. தீவிரவாதத்துக்கு நிதி ஆதரவைத் தடுக்கவும், அதனை வேரறுக்கவும் இருநாட்டு தலைவர்களும் இணைந்து செயல்பட உறுதியளித்தனர். இது பாகிஸ்தானுக்கு அரசியல் ரீதியாக சிரமத்தை ஏற்படுத்தும் என விமர்சகர்கள் கருதுகின்றனர்.
பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக குற்றச்சாட்டுகள் எதிர்கொள்ளும் பாகிஸ்தானை சர்வதேச அளவில் தனிமைப்படுத்த இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு கிடைத்த முன்னேற்றமாகவே இந்தியா–மலேசிய உறவின் புதிய பரிமாணம் பார்க்கப்படுகிறது.
நீண்டகாலமாக பாகிஸ்தானுடன் இணைந்திருந்த மலேசியாவை, இந்தியா தனது நெருங்கிய கூட்டாளியாக மாற்றியிருப்பது பிரதமர் மோடியின் வெளிநாட்டு கொள்கை நுணுக்கத்தை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. உலக அரங்கில் தன்னுடைய நிலையை வலுப்படுத்த விரும்பும் மலேசியாவின் மனோபாவத்தை உணர்ந்து, பிரிக்ஸ் போன்ற கூட்டமைப்புகளில் இணைய விரும்பும் அதன் ஆர்வத்தையும் கருத்தில் கொண்டு இந்தியா செயல்திட்டம் வகுத்ததாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.