ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் இந்தியாவின் பகுதியாகும் – அமெரிக்க வரைபடம் பாகிஸ்தானை அதிர்ச்சியடையச் செய்தது
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய இந்திய வரைபடத்தில், பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதி இந்தியாவின் ஒருங்கிணைந்த நிலப்பரப்பாக தெளிவாக இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் ஜம்மு–காஷ்மீர் முழுவதும் இந்தியாவுக்கே உரியது என்பதை அமெரிக்கா மறைமுகமாக உறுதி செய்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
1947ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர், ஜம்மு–காஷ்மீர் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி, அந்த மாநிலத்தின் ஒரு பகுதியை பலவந்தமாக கைப்பற்றியது. பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள அந்தப் பகுதி, இன்றளவும் “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்” என அழைக்கப்படுகிறது.
இந்திய விடுதலைக்குப் பிறகு, மன்னராட்சியில் இருந்த சுமார் 560 சமஸ்தானங்கள் இந்திய ஒன்றியத்துடன் இணைந்தன. ஆனால் காஷ்மீர் தொடர்பான சிக்கலான சூழ்நிலை காரணமாக, அந்த மாநிலத்திற்கு தனிச்சலுகை வழங்கும் வகையில் அரசியலமைப்பின் 370வது பிரிவு அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஜம்மு–காஷ்மீருக்கு தனி அரசியல் சட்டமும், சிறப்பு அதிகாரங்களும் வழங்கப்பட்டன.
பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில், 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், ஜம்மு–காஷ்மீர் மாநிலம் ஜம்மு–காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதே ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி முதல் இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து, 2019 நவம்பர் 3ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம், 28 மாநிலங்கள் மற்றும் 9 யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய புதிய இந்திய வரைபடத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அந்த வரைபடத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் சீனா உரிமை கோரும் சில எல்லைப் பகுதிகளும் இந்திய நிலப்பரப்புக்குள் சேர்க்கப்பட்டிருந்தன.
முந்தைய காலங்களில் காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட சில மேற்கத்திய நாடுகளும், பல இஸ்லாமிய நாடுகளும் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்திருந்தன. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், உலக நாடுகளின் அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் தென்படத் தொடங்கியுள்ளது.
அதற்கு எடுத்துக்காட்டாக, 2023 செப்டம்பரில் இந்தியா நடத்திய ஜி20 உச்சிமாநாட்டின் போது, ஜி20 சுற்றுலா அமைச்சர்கள் மாநாடு காஷ்மீரில் நடைபெற்றது. அந்நிகழ்வின் போது, ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமர் சயீப் பின் ஜாயத் அல் நயான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் உள்ளடக்கிய புதிய இந்திய வரைபடத்தை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், சீனா உரிமை கோரும் அக்சாய் சின் பகுதியும் இந்திய எல்லைக்குள் காட்டப்பட்டிருந்தது.
மேலும், 2024ஆம் ஆண்டு ஜம்மு–காஷ்மீரை பாகிஸ்தானின் பகுதியாக காட்டிய தவறான வரைபடம் இஸ்ரேல் அரசின் இணையதளத்தில் வெளியானது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, அந்த வரைபடத்தை உடனடியாக நீக்கிய இஸ்ரேல் அரசு, அது தொழில்நுட்பப் பிழை என விளக்கம் அளித்து இந்தியாவிடம் மன்னிப்பும் கோரியது.
இந்நிலையில், இந்தியா–அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை சூழலில், இந்தியாவின் வரிச்சலுகைகள் குறித்து விளக்கும் வகையில் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய வரைபடம், முழு ஜம்மு–காஷ்மீர் பகுதியையும் இந்தியாவின் பகுதியாக தெளிவாகக் காட்டியுள்ளது.
இதன் மூலம், காஷ்மீர் தொடர்பான வரலாற்று உண்மைகளை உலக வல்லரசான அமெரிக்கா ஏற்றுக் கொண்டிருப்பது வெளிப்படையாகியுள்ளது. இதற்கு மாறாக, அமெரிக்காவுடன் நெருக்கம் ஏற்படுத்த பாகிஸ்தான் மேற்கொண்ட ராஜதந்திர முயற்சிகள் அனைத்தும் பயனற்றதாகி விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நீண்ட காலமாக பாகிஸ்தான் முன்வைத்து வந்த நிலைப்பாடுகளை அமெரிக்கா ஏற்கவில்லை என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும், இது சர்வதேச அரங்கில் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு என்றும் புவிசார் அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.