இந்தியா – மலேசியா உறவில் புதிய அத்தியாயம்: பல துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள்
இந்தியா மற்றும் மலேசியா நாடுகளுக்கிடையே வாணிபம், முதலீடு, நவீன தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக மலேசியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, கோலாலம்பூரில் உள்ள பெர்தானா புத்ரா அரசு வளாகத்தில், ராணுவ மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி மற்றும் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தலைமையில் இருநாடுகளின் உயர் மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உலக அளவில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில், கடல்வழி பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் இரு நாடுகளும் தங்களின் முழுத் திறனையும் பயன்படுத்தி இணைந்து செயல்பட வேண்டும் என்பதைக் கூட்டத்தில் இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
பின்னர், இருநாட்டு தலைவர்களின் முன்னிலையில், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்ப முன்னேற்றம் உள்ளிட்ட பல துறைகளை உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, பயங்கரவாதம் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு தெளிவானது என்றும், இரட்டை அணுகுமுறைக்கு இடமில்லை என்றும் கூறினார். இந்தியா மற்றும் மலேசியா இடையிலான உறவு உறுதியானதும் நம்பிக்கைக்குரியதுமாக வளர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்திய வம்சாவளியினர் அதிகம் வசிக்கும் உலகின் முக்கிய நாடுகளில் மலேசியாவும் ஒன்றாக இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், தமிழ் மொழி மீது உள்ள பொதுவான நேசம் இரு நாடுகளையும் உறுதியாக இணைக்கிறது என கூறினார்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வளர்ச்சி, அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்ய இந்தியா முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகவும், வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்பெற்று வருவதாகவும் பிரதமர் மோடி விளக்கினார்.
இதற்கு முன் உரையாற்றிய மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், 1957ஆம் ஆண்டு முதல் தொடரும் இந்தியா–மலேசியா உறவில், இந்த ஒப்பந்தங்கள் ஒரு புதிய மைல்கல்லாக அமைந்துள்ளதாக தெரிவித்தார். உக்ரைன், காசா போன்ற சர்வதேச பிரச்சினைகளில் அமைதியை நிலைநாட்ட பிரதமர் மோடி மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு அவர் தனது பாராட்டையும் தெரிவித்தார்.