இந்தியர்கள் அனைவரும் பண்பாட்டு அடையாளத்தில் இந்துக்களே – மோகன் பாகவத்
இந்தியாவில் வாழும் மக்கள் அனைவரும் கலாசார அடிப்படையில் இந்துக்கள்தான் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று உரையாற்றினார். அந்த உரையில், ஆர்எஸ்எஸ் எந்த அமைப்புடனும் போட்டியிட்டு உருவான அமைப்பு அல்ல என்றும், பிற அமைப்புகளை எதிர்க்கும் நோக்கத்திலும் தோன்றவில்லை என்றும் அவர் விளக்கினார்.
ஆர்எஸ்எஸ் யாருக்கும் எதிரான அமைப்பு அல்ல என்றும், புகழ் அல்லது அதிகாரம் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் வசிக்கும் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் ஒரே மூதாதையரின் சந்ததிகளே என்றும், அவர்களின் மூலாதாரம் இந்த மண்ணிலேயே இருப்பதாகவும் மோகன் பாகவத் கூறினார். அதனால் அனைவரும் பண்பாட்டு ரீதியில் இந்து அடையாளத்தையே கொண்டவர்கள் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், “இந்து – முஸ்லிம் ஒற்றுமை” என்ற சொற்றொடரே தவறானது என்றும், ஏற்கனவே ஒன்றாக உள்ள மக்களை மீண்டும் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அனைவரும் இயல்பாகவே ஒருமைப்பாட்டுடன் உள்ளவர்கள் என்றும் அவர் உணர்வுபூர்வமாக பேசினார்.