கடந்த பத்து ஆண்டுகளில் ரயில்வே துறையின் பொருளாதார நிலை கணிசமாக உயர்வு – அஸ்வினி வைஷ்ணவ்
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறையின் நிதி நிலை குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் உரையாற்றிய அவர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ரயில்வே துறையில் பல்வேறு மாற்றங்களும் வளர்ச்சியும் நிகழ்ந்துள்ளதாக கூறினார். 2014 முதல் 2024 வரை உள்ள காலகட்டத்தில் சுமார் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு மேலாக இன்னும் 1.5 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
பயணிகள் போக்குவரத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தை அதிகரிப்பதோடு, செலவினங்களை குறைப்பதற்காக ஒருங்கிணைந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் விளக்கினார்.
மேலும், நாட்டில் சரக்கு போக்குவரத்து தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு முன் 37,481 கோடி ரூபாயாக இருந்த எரிசக்தி செலவினம் தற்போது 32,400 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.