நகை ஆசையில் 90 வயது மூதாட்டி – கட்டிலுடன் தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்
ராஜஸ்தான் மாநிலத்தில் நகைகளை அபகரிக்க 90 வயது மூதாட்டியை கட்டிலோடு தூக்கிச் சென்ற கொள்ளைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பண்டி மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், தனது வீட்டின் முன்பகுதியில் இரவு நேரத்தில் காற்று வாங்கியபடி தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் உடலில் அதிக அளவு நகைகள் இருந்ததாக கூறப்படுகிறது. நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், பணம் மற்றும் நகைகளை தேடி வீடு முழுவதும் சோதனை செய்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை.
அந்த நேரத்தில் மூதாட்டி அணிந்திருந்த நகைகள் அவர்களின் கவனத்திற்கு வந்தது. பின்னர் அவை தங்கம் அல்ல, வெள்ளி நகைகள் என்பதும் தெரிய வந்தது. இருந்தாலும், கிடைத்ததை இழக்க வேண்டாம் என நினைத்த கொள்ளையர்கள், நகைகளை எப்படியாவது எடுத்துச் செல்ல முடிவு செய்தனர்.
மூதாட்டி விழித்துக் கொண்டு சத்தமிடக்கூடாது என்பதற்காக, அவரை கட்டிலோடு தூக்கிச் சென்ற அவர்கள், அருகிலுள்ள தனிமையான இடத்தில் வைத்து நகைகளை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.
அடுத்த நாள் காலை அந்தப் பகுதியில் சென்ற பொதுமக்கள், கட்டிலில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு, காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பண்டி மாவட்ட போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







