அரபு நாடுகளுடன் வர்த்தக கூட்டணி – பாகிஸ்தானுக்கு இந்தியாவின் புதிய “செக்”
ஆறு நாடுகளை இணைக்கும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலுடன் (GCC) நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை இந்தியா மீண்டும் உயிர்ப்பித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கமே இந்தியாவுக்கு சாதகமான வர்த்தக முன்னேற்றங்களோடு துவங்கியுள்ளது. முதலில், ஐரோப்பிய யூனியனுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதனைத் தொடர்ந்து, இந்தியா மீது விதிக்கப்பட்டிருந்த வரியை 18 சதவீதமாக குறைத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்தியாவின் நிபந்தனைகளுக்கு இணங்கவே இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக அறிவித்தார்.
உலகளாவிய வர்த்தக உறவுகளை வேகப்படுத்தி வரும் இந்தியா, தற்போது சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன் மற்றும் ஓமன் ஆகிய ஆறு நாடுகளை உள்ளடக்கிய அரபு நாடுகளின் கூட்டமைப்புடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கான விதிமுறை ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளது.
2004ஆம் ஆண்டு ஜிசிசியுடன் முதன்முறையாக தொடங்கிய இந்த வர்த்தக பேச்சுவார்த்தைகள், 2011ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டன. பின்னர் 2022ல் மீண்டும் பேச்சுவார்த்தைகளை தொடங்க இருதரப்பும் முடிவு செய்தது. 2023ல் திருத்தப்பட்ட விதிமுறை வரைவு வெளியிடப்பட்ட நிலையில், தற்போது ஒரு முக்கியமான முன்னேற்றம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜிசிசியுடன் கையெழுத்தாக உள்ள இந்த ஒப்பந்தம் உணவு பதப்படுத்தல், உள்கட்டமைப்பு, பெட்ரோ கெமிக்கல், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளுக்கு பெரும் பலன் அளிக்கும் என மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டிலிருந்து இந்தியா மற்றும் ஜிசிசி நாடுகளுக்கிடையேயான இருதரப்பு வர்த்தகம் ஆண்டுதோறும் உயர்வை சந்தித்து வருகிறது.
2021–22 நிதியாண்டில் இந்தியா–ஜிசிசி வர்த்தக மதிப்பு சுமார் 155 பில்லியன் டாலராக இருந்தது. இதில் இறக்குமதி 110.7 பில்லியன் டாலராகவும், ஏற்றுமதி 43.9 பில்லியன் டாலராகவும் பதிவாகியது.
அடுத்த ஆண்டில், இந்த வர்த்தகம் 185 பில்லியன் டாலராக உயர்ந்தது. அதில் இறக்குமதி 133.2 பில்லியன் டாலராகவும், ஏற்றுமதி 51.3 பில்லியன் டாலராகவும் இருந்தது.
அதற்குப் பிறகு ஒரு ஆண்டு, வர்த்தக மதிப்பு 162 பில்லியன் டாலராக இருந்த நிலையில், கடந்த ஆண்டு அது மீண்டும் உயர்ந்து 179 பில்லியன் டாலரை எட்டியது. இதில் இறக்குமதி 121.7 பில்லியன் டாலராகவும், ஏற்றுமதி 56.9 பில்லியன் டாலராகவும் அதிகரித்துள்ளது.
தற்போது மீண்டும் தொடங்கியுள்ள பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில், இந்தியா–ஜிசிசி வர்த்தகம் பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, ஜிசிசி உறுப்புநாடுகளுடன் இந்தியா தனித்தனியாகவும் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. 2022ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்துடனும், கடந்த ஆண்டு டிசம்பரில் ஓமனுடனும் விரிவான பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தான பின்னணியில், ஜிசிசி நாடுகளுடன் இந்தியா மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தியிருப்பது, பாகிஸ்தானை அரபு நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து தனிமைப்படுத்தும் ஒரு தந்திரமாகவும் பார்க்கப்படுகிறது.