பைக்குகளில் பாதுகாப்புக்காக இரும்புக் கம்பிகள் – பாகிஸ்தானில் பரவும் புதிய நடைமுறை
பாகிஸ்தானில் இருசக்கர வாகனங்களில் இரும்புக் கம்பிகளை பொருத்தும் நடைமுறை சமீப காலமாக அதிகரித்து, சமூக ஊடகங்களில் கவனம் பெற்றுவருகிறது.
லாகூர் நகரில், பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களின் முன்பகுதியில் நீளமான இரும்புக் கம்பிகளை செங்குத்தாக பொருத்திக் கொண்டு செல்லும் வாகன ஓட்டிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
இதனைப் பற்றிய காணொளிகள் இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, இது ஏதேனும் திரைப்பட பாணி பாதுகாப்பு யுக்தியா அல்லது வித்தியாசமான அலங்கார போக்கா என பலரும் குழப்பம் அடைந்தனர்.
ஆனால் இந்த நடைமுறையின் பின்னணி குறித்து விசாரித்தபோது, அதிர்ச்சிகரமான காரணங்கள் வெளிச்சத்திற்கு வந்தன.
லாகூரில் நடைபெறும் பட்டம் பறக்க விடும் திருவிழாக்களில், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடித் தூள்கள் கலந்த மாஞ்சா நூல்கள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த நூல்கள் பட்டத்திலிருந்து அறுந்து சாலைகளின் குறுக்கே தொங்கிக் கிடக்கும் நிலை உருவாகிறது.
வேகமாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இந்த மெல்லிய நூல்கள் கண்களுக்கு தெரியாமல் போகும் காரணத்தால், பல உயிரிழப்புகளும் கடுமையான விபத்துகளும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆபத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, “ஆண்டெனா” போன்ற வடிவமைப்பில் இரும்புக் கம்பிகளை வாகனங்களில் பொருத்தத் தொடங்கியுள்ளனர். பைக்கின் முன்பக்க ஹேண்டில் அல்லது ஃபோர்க் பகுதியில் பொருத்தப்படும் இந்த கம்பி, மாஞ்சா நூல்கள் உடலில் படாமல் தடுக்க உதவுகிறது என வாகன ஓட்டிகள் விளக்குகின்றனர்.