மாநில தேர்தல் ஆணையர்களின் அகில இந்திய மாநாடு – 24ஆம் தேதி நடைபெறும்
மாநில தேர்தல் ஆணையர்களுக்கான தேசிய அளவிலான மாநாடு வரும் 24ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், டெல்லியில் அமைந்துள்ள பாரத் மண்டபத்தில் இந்த மாநாடு நடத்தப்படவுள்ளதாகவும், நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த தேர்தல் ஆணையர்கள் இதில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தேசிய மாநாடு நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டிற்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையேற்க, தேர்தல் ஆணையர்களான சுக்வீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரும் இணைந்து வழிநடத்தவுள்ளனர்.
மாநாட்டின் போது தேர்தல் நடைமுறைகள், தேர்தல் நடத்தலுக்கான தயாரிப்புகள், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ECINET இணையதளம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.