வெனிசுலா எண்ணெய் கொள்முதல் விவகாரம் – இந்தியா, சீனாவிடம் அமெரிக்காவின் அழுத்தம்; டிரம்ப் முன்வைத்த புதிய கோரிக்கை
ரஷ்யா – உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்த முயற்சிகள் இதுவரை வெற்றியடையாத நிலையில், அந்த சூழலை சமாளிக்க அமெரிக்கா பல்வேறு மாற்று நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
உக்ரைன் போரின் பின்னணியில் ரஷ்யாவுக்கு செல்லும் வருவாயை கட்டுப்படுத்தும் நோக்கில், அமெரிக்கா தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு மாற்றாக வெனிசுலா எண்ணெயை வாங்குமாறு இந்தியாவை அமெரிக்கா வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சூழலில், ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை குறைத்து, அதற்குப் பதிலாக வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் வாங்க இந்தியா தயாராக இருப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்ததாக கூறப்படுகிறது. புளோரிடா செல்லும் வழியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது தொடர்பாக இந்தியாவுடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் இந்தியா ஈரானுக்கு மாற்றாக வெனிசுலா எண்ணெயை இறக்குமதி செய்யும் எனவும் குறிப்பிட்டார்.
இந்த ஒப்பந்தம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். முன்னதாக, ஈரானிடமிருந்து பெருமளவில் கச்சா எண்ணெய் வாங்கி வந்த இந்தியா, அமெரிக்கா விதித்த நீண்டகால பொருளாதார தடைகளால் அந்த இறக்குமதியை கணிசமாக குறைத்தது.
இந்நிலையில், இந்தியா மீண்டும் வெனிசுலாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதி அளிக்கலாம் என்ற சைகைகள் வெளியாகி வரும் சூழலில், அதிபர் டிரம்பின் கருத்துகள் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளன. அதேபோல், வெனிசுலா எண்ணெய் கொள்முதல் குறித்து சீனாவுடனும் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், வெனிசுலாவின் இடைக்கால தலைவர் டெல்சி ரோட்ரிக்ஸ் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி மூலம் உரையாடினார். அந்த உரையாடலின் போது, எரிசக்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டிருந்தார். வருங்காலங்களில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த இரு தரப்பும் ஒப்புக் கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒரு காலகட்டத்தில் இந்தியா தினமும் லட்சக்கணக்கான பீப்பாய்கள் அளவில் வெனிசுலா எண்ணெயை இறக்குமதி செய்து வந்தது. குறிப்பிட்ட காலத்தில் கராகஸின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு கிட்டத்தட்ட பாதியாக இருந்தது. ஆனால் 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை கடுமையாக்கியதையடுத்து, இருநாடுகளுக்கிடையேயான வர்த்தகம் பெரிதும் சரிந்தது.
இரண்டாம் நிலை அபராதங்களை தவிர்க்க இந்திய நிறுவனங்கள் எண்ணெய் கொள்முதலை குறைத்த நிலையில், தற்போது அமெரிக்க அதிபரின் புதிய நிலைப்பாடு காரணமாக இந்தியா – வெனிசுலா இடையிலான கச்சா எண்ணெய் வர்த்தகம் மீண்டும் வேகமெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.