இறக்குமதி வரி தளர்வு – 140 கோடி இந்தியர்களின் நன்றியை அமெரிக்காவுக்கு தெரிவித்த பிரதமர் மோடி
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரி குறைக்கப்பட்டதற்கு, 140 கோடி இந்திய மக்களின் சார்பில் அமெரிக்க அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளமான ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்புடன் தொலைபேசியில் பேசியது மிகவும் மகிழ்ச்சி அளித்ததாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு இனி 18 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்த முக்கிய முடிவுக்காக ட்ரம்பிற்கு இந்திய மக்களின் சார்பில் நன்றியை பதிவு செய்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளும், ஜனநாயக மதிப்புகளை பின்பற்றும் முக்கிய நாடுகளும் இணைந்து செயல்படும்போது, அது பொதுமக்களுக்கு நன்மை அளிப்பதோடு மட்டுமல்லாமல், இருதரப்புக்கும் பயன் தரும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், உலகளாவிய அமைதி, நிலைத்தன்மை மற்றும் பொருளாதார செழிப்பை உறுதி செய்வதில் ட்ரம்பின் தலைமைத்துவம் குறிப்பிடத்தக்க பங்காற்றுகிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உலக அமைதிக்கான ட்ரம்பின் முயற்சிகளுக்கு இந்தியா முழு ஆதரவு வழங்கும் என உறுதியளித்துள்ள அவர், இந்தியா – அமெரிக்கா உறவுகளை மேலும் வலுப்படுத்தி புதிய உயரங்களுக்கு கொண்டு செல்ல இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.