8 மாநிலங்களில் அரிய கனிம வளங்கள் கண்டுபிடிப்பு – மத்திய அரசு தகவல்
தமிழகம், கேரளா உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் உள்ள கடற்கரை மணற்பரப்புகள் மற்றும் கடினப் பாறை பகுதிகளில், பெருமளவில் அரிய வகை கனிம வளங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மாநிலங்களவையில் கேள்விக்கு பதிலளித்த மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, இந்தியாவின் கடற்கரை பகுதிகளிலும் பாறை வளமிக்க நிலங்களிலும் அணுசக்தித்துறை மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில், அரிய கனிமங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, தமிழகம், கேரளா, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா, குஜராத், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் கடற்கரை பகுதிகளில் உள்ள மணலில், “மோனசைட்” எனப்படும் முக்கியமான அரிய கனிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த எட்டு மாநிலங்களிலேயே உள்ள கனிம படிமங்களில், மொத்தமாக 1,315 கோடி கிலோ அளவிற்கு மோனசைட் வளங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதனுடன் 723 கோடி கிலோ அளவிலான அரிய மண் ஆக்சைடு வளங்களும் இருப்பதாகவும் அமைச்சர் விளக்கினார்.
மேலும், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் உள்ள கடினப் பாறை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், 129 கோடி கிலோ அளவில் மோனசைட் மற்றும் அரிய ஆக்சைடு கனிம வளங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அரிய வகை கனிம வளங்கள் தொடர்பாக உலகளாவிய அளவில் இந்தியா முன்னணி நான்கு நாடுகளில் ஒன்றாகத் திகழ்ந்து வருவதாகவும், இது நாட்டின் தொழில்துறை மற்றும் அணுசக்தி வளர்ச்சிக்கு பெரும் பலனளிக்கும் எனவும் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி குறிப்பிட்டார்.