தைப்பூச விழாவை முன்னிட்டு மருதமலையில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்
தைப்பூச பண்டிகையை ஒட்டி, கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் மிகுந்த விமரிசையுடன் நடைபெற்றது.
கடந்த 26-ஆம் தேதி கொடியேற்ற நிகழ்வுடன் தொடங்கிய இந்த விழாவில், தினந்தோறும் வேள்வி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன.
நேற்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை, திருக்கல்யாண மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி மற்றும் தெய்வானையுடன் திருக்கல்யாணக் கோலத்தில் அருள்பாலித்தார்.
இதனைத் தொடர்ந்து, தங்க மயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதிகளில் பவனி வந்தார். விழாவின் உச்ச நிகழ்வாக தேரோட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக சுமார் 1,500 காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.