மத்திய பட்ஜெட்டில் பெண்கள் நலனுக்கு முன்னுரிமை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
பெண்கள் சுயதொழில் மேற்கொள்ளவும், சிறு வணிக முயற்சிகளை தொடங்கவும் உதவும் வகையில் “SHE MARTS” என்ற புதிய கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை சமர்ப்பித்த பின் அவர் உரையாற்றும்போது, மகளிர் சுய உதவிக் குழுக்களில் செயல்படும் பெண்களை சிறு தொழில்முனைவோராக உருவாக்கும் நோக்கில் இந்த கடன் திட்டம் கொண்டு வரப்படுவதாக தெரிவித்தார்.
கிராமப்புறப் பெண்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு பரந்த சந்தை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன், பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் பிராண்டு மதிப்பை உயர்த்தி, தொடர்ச்சியான வருமானத்தை உறுதி செய்யும் வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், சமூக அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் சில்லறை விற்பனை நிலையங்கள் மண்டல அளவில் நிறுவப்படும் என்றும், வழக்கமான வங்கி கடன்களுடன் கூடுதலாக நிதி ஆதரவும் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இதனுடன், “லட்சாதிபதி திதி” திட்டம் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் SHE MARTS கடன் திட்டத்தின் மூலம் அதிக அளவில் பயனடைவார்கள் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.