அமைதி வாரியத்தில் பாகிஸ்தானா? – பயங்கரவாத நாட்டை சமூக ஊடகங்கள் சாடும் காட்சிகள்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உருவாக்கிய அமைதி வாரியத்தில் பாகிஸ்தான் நிறுவனர் உறுப்பினராக இணைந்துள்ளதற்கு, சமூக வலைதளங்களில் பலரும் கேலியும் கிண்டலும் கலந்த விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் மோதலை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வரவும், போரால் சேதமடைந்த காசா பகுதியை மீளக் கட்டமைக்கவும், சர்ச்சைக்குரிய பாலஸ்தீனப் பகுதியில் இடைக்கால நிர்வாகத்தை அமைக்கவும் ட்ரம்ப் தலைமையில் ஒரு சர்வதேச அமைதி வாரியம் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை, ட்ரம்ப் தனது தலைமையிலான இந்த அமைதி வாரியத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். இதற்காக, உலகம் முழுவதும் இருந்து 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு முன்கூட்டியே அழைப்புகள் அனுப்பப்பட்டிருந்தன.
அந்த அழைப்பை ஏற்று, துருக்கி, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான், அஜர்பைஜான், ஹங்கேரி, பராகுவே, பஹ்ரைன், மொராக்கோ, ஆப்கானிஸ்தான், அர்மீனியா, பல்கேரியா, இந்தோனேசியா, ஜோர்டான், கஜகஸ்தான், கொசோவோ, கத்தார், உஸ்பெகிஸ்தான், மங்கோலியா உள்ளிட்ட மொத்தம் 59 நாடுகள் இந்த அமைதி வாரியத்தில் இணைவதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
ஆனால், கடந்த வாரம் டாவோஸில் நடைபெற்ற தொடக்க விழாவில், வெறும் 19 நாடுகளின் பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்தியாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அமைதி வாரியத்தில் சேருவது குறித்து இந்தியா இதுவரை எந்தத் தீர்மானத்தையும் அறிவிக்கவில்லை. டாவோஸ் நிகழ்ச்சியிலும் இந்தியா பங்கேற்கவில்லை.
இந்தச் சூழலில், பாகிஸ்தான் அமைதி வாரியத்தின் நிறுவனர் உறுப்பினராக இணைந்ததை வரவேற்று, ட்ரம்ப் அமைதி வாரியத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
இந்த பதிவைத் தொடர்ந்து, இணையவாசிகள் பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பயங்கரவாதத்துடன் நெருக்கமாக தொடர்புடைய நாடாகக் கருதப்படும் பாகிஸ்தான், அமைதி குறித்த வாரியத்தில் எப்படி இடம் பெற முடியும் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் உள்ளிட்ட உலகின் பல பயங்கரவாதச் சம்பவங்களின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாகக் கூறி, “அமைதியைப் பற்றி பேச பாகிஸ்தானா?” என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேலி செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பான மீம்ஸ்கள் இணையத்தில் வெள்ளம் போல பரவி வருகின்றன. அதில், “பின் லேடனையே கொண்டு வந்து அமைதி வாரியத் தலைவராக்கிவிடுங்கள்” என்ற வகையிலான மீம்ஸ்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
மேலும், பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் ஒரு நாடு அமைதி வாரியத்தில் உறுப்பினராக இருப்பது எப்படி சாத்தியம் என சிலர் கேள்வி எழுப்ப, அதற்கு “அமைதியின் அடித்தளத்தையே சிதைக்கும் நாடுதான் பாகிஸ்தான்” என்று மற்றொருவர் பதிலளித்துள்ளார்.
உறுப்பினர் ஆக 1 பில்லியன் டாலர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தொகையை பாகிஸ்தான் எவ்வாறு செலுத்தியது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. “பாகிஸ்தானுக்கான அந்த 1 பில்லியன் டாலரை யார் கொடுத்தார்கள்?” என்று ஒருவர் கேட்க, “நுழைவுக் கட்டணம் உண்மையிலேயே செலுத்தப்பட்டதா?” என மற்றொருவர் ஆச்சரியமாக பதிவிட்டுள்ளார்.
சிலர், “சொந்த நாட்டு மக்கள் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவுக்கே போராடும் நிலையில், இவ்வளவு பெரிய தொகையை பாகிஸ்தான் எங்கிருந்து கொண்டுவந்தது?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், “ட்ரம்பின் அமைதி வாரியத்தில் இரண்டாவது பெரிய பயங்கரவாத நாடு பாகிஸ்தான் என்றால், முதலிடத்தில் அமெரிக்காவே இருக்கும்” என்று ஒருவர் கிண்டலடித்த பதிவும் வைரலாகி வருகிறது.