வங்கதேசத்தை முகமது யூனுஸ் சீரழித்துவிட்டார் – ஷேக் ஹசீனா கடும் விமர்சனம்
வங்கதேசத்தை முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு சீரழித்துவிட்டதாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கடந்த ஆண்டு வங்கதேசத்தில் வெடித்த அரசியல் போராட்டங்களின் தொடர்ச்சியாக, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறினார். அதன் பின்னர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த நிலையில், வரும் பிப்ரவரி 12ஆம் தேதி வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தலை முன்னிட்டு கருத்து தெரிவித்துள்ள ஷேக் ஹசீனா, முகமது யூனுஸை மக்களின் விரோதி, பண மோசடி செய்பவர், அதிகாரப் பசி கொண்ட துரோகி என கடுமையாக விமர்சித்துள்ளார்.
வங்கதேசம் தற்போது பாதாளத்தின் விளிம்பில் நிற்பதாகவும், விடுதலைப் போரின் மூலம் பெற்ற தாய்நாடு, தீவிரவாத மற்றும் வகுப்புவாத சக்திகள், வெளிநாட்டு சதிகாரர்களின் தாக்குதலால் சீரழிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வங்கதேசத்தில் ஜனநாயகம் நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து, சிறுபான்மையினர் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாகவும் ஷேக் ஹசீனா குற்றம்சாட்டியுள்ளார்.
முகமது யூனுஸ் தலைமையிலான சட்டவிரோத ஆட்சியை அகற்ற மக்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.