பேச்சுவார்த்தைக்கு இடையே உக்ரைன் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல் – சர்வதேச அளவில் பதற்றம்
ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் வடகிழக்கு நகரமான கார்கீவ் பகுதிகளில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நான்கு ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கும் ரஷ்யா – உக்ரைன் போருக்கு முடிவுகட்ட, அமெரிக்கா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக அமெரிக்கா – ரஷ்யா – உக்ரைன் இடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தை அபுதாபியில் நடைபெற்று வருகிறது.
இரு நாட்கள் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், போரை நிறுத்துவது மற்றும் அமைதி ஒப்பந்தம் தொடர்பான விவகாரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் விவாதித்து வருகின்றனர்.
இந்நிலையில், முதல் நாள் பேச்சுவார்த்தை முடிந்த சில மணி நேரங்களுக்குள், இரவோடு இரவாக ரஷ்ய படைகள் உக்ரைன் மீது ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டுள்ளன.
இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து தாக்குதல் நடைபெறும் சூழ்நிலையில், மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையுமாறு உக்ரைன் அரசு அறிவுறுத்தியுள்ளது.
முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்படுவதற்கு முன்பே ரஷ்ய படைகள் நடத்திய இந்த ட்ரோன் தாக்குதல், சர்வதேச அரசியல் வட்டாரங்களில் கடும் கவலையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.