திராவிட மாடல் ஆட்சியில் உயர் கல்வி துறை செயலிழந்த நிலையில் உள்ளது – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
திராவிட மாடல் ஆட்சியின் கீழ் தமிழக உயர்கல்வித்துறை உயிரற்ற நிலையில் தள்ளப்பட்டுள்ளதாக, தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் பல்வேறு கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் 21 பல்கலைக்கழகங்களில், 12 பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமான இடங்கள் காலியாக உள்ளதாகவும், மீதமுள்ள 9 பல்கலைக்கழகங்களில் 15 முதல் 40 சதவீதம் வரை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாகவும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைத்த விவரங்கள் அதிர்ச்சி அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, சென்னைப் பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் போன்ற தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த பழமையான கல்வி நிறுவனங்களில், பேராசிரியர் பணியிடங்களில் சுமார் பாதி அளவு காலியாக இருப்பது, திமுக அரசின் நிர்வாகத் தோல்வியை வெளிப்படையாக காட்டுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்வி நிறுவனங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்காமல், தரமான கட்டட வசதிகளை ஏற்படுத்தாமல், போதிய ஆசிரியர் நியமனங்களை மேற்கொள்ளாமல், “கல்வியில் முன்னணி தமிழ்நாடு” என விளம்பர நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு திமுக அரசு வெட்கப்பட வேண்டும் என நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
தனது மகனுக்குப் பதவி கிடைப்பதில் தீவிர கவனம் செலுத்தி அதில் வெற்றி பெற்ற முதல்வர் ஸ்டாலின், தமிழக இளைஞர்களுக்கு தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்யாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார். படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு, கல்வி பயிலும் இளைஞர்களின் எதிர்காலம் போன்ற முக்கியமான விஷயங்களை திமுக அரசு இவ்வளவு அலட்சியமாக கையாள்வதற்கான காரணம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
உயர்கல்வித்துறையின் அடிப்படை ஆதாரங்களை பலவீனப்படுத்தி, தமிழக இளைஞர்களின் கல்விக் கனவுகளை அழிக்கும் நடவடிக்கைகளே திமுகவின் சமூகநீதியா என நயினார் நாகேந்திரன் தனது பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார்.