சபரிமலை ஐயப்பன் கோயிலில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று தரிசனம்
மாதாந்திர பூஜைக்காக கடந்த 17ஆம் தேதி மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கணபதி பூஜை, நெய் அபிஷேகம் உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று சபரிமலைக்கு வருகை தந்து ஐயப்ப சுவாமியை தரிசிக்க உள்ளார்.
இதையொட்டி நேற்று பிற்பகலிலிருந்தே கோயில் பகுதியில் பக்தர்களின் நுழைவு கட்டுப்படுத்தப்பட்டது. மேலும், தொடர்ச்சியான கனமழையால் நேற்று பக்தர்கள் குறைவாகவே வந்திருந்தனர். இதனால் பம்பை, அப்பாச்சிமேடு, நடைப்பந்தல் உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடியதாக இருந்தன.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று மாலை திருவனந்தபுரம் வந்தார். இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் வந்து, அங்கிருந்து கார் மூலம் பம்பை நோக்கி பயணம் செய்கிறார்.
பம்பையில் புனித நதியில் நீராடி, கணபதி கோயிலில் இருமுடி கட்டி, பின்னர் ஜீப்பில் சபரிமலைக்கு செல்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் ஒரு மணியளவில் அவர் ஐயப்ப சுவாமி தரிசனம் செய்வார் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதற்கான முன்னேற்பாடாக நேற்று ஜீப்புகள் இயக்கி பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டன. பம்பை, நிலக்கல், சபரிமலை ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று இரவு கோயில் நடை வழக்கம்போல் சாத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.