உளவுத்துறை–காவல்துறை அலட்சியம் அம்பலம் : சிட்னி தாக்குதல் குறித்து அதிர்ச்சி குற்றச்சாட்டு
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில், யூதப் பண்டிகை கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற யூத எதிர்ப்பு பயங்கரவாத தாக்குதல், அந்நாட்டின் உளவுத்துறை மற்றும் காவல்துறையின் பெரும் தோல்வியை வெளிப்படுத்தியுள்ளதாக கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த தந்தை–மகன் இருவர் நடத்தியதாக கூறப்படும் நிலையில், முக்கிய குற்றவாளியான நவீத் அக்ரம் ஏற்கெனவே Australian Security Intelligence Organisation (ASIO) எனப்படும் ஆஸ்திரேலிய உளவுத் துறையின் கண்காணிப்பில் இருந்தவர் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
யூத எதிர்ப்பு கருத்துகள் மற்றும் ISIS தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததாக சந்தேகிக்கப்பட்ட நவீத் அக்ரம், சுமார் ஆறு மாதங்கள் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக ASIO தலைவர் மைக் பெர்ஜெஸ் தெரிவித்துள்ளார். இருப்பினும், போதிய ஆதாரங்கள் இருந்தபோதும், அவர் நாட்டுக்கும் யூத சமூகத்திற்கும் அச்சுறுத்தலல்ல எனக் கூறி விசாரணையை நிறுத்தி, அவர்மீது மேற்கொண்ட கண்காணிப்பையும் காவல்துறை கைவிட்டது.
இத்தகைய பின்னணியில், இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்த ஒருவருக்கு நடைமுறைச் சான்றிதழ் வழங்கிய காவல்துறையின் முடிவே, போண்டி கடற்கரை தாக்குதலுக்குப் பலரின் உயிரிழப்பிற்கு வழிவகுத்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தாக்குதலில் ஈடுபட்ட நவீத் அக்ரமின் தந்தை சஜித் அக்ரம், காவல்துறையுடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவருக்குச் சட்டபூர்வமாக வழங்கப்பட்ட ஆறு துப்பாக்கிகள் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தாக்குதலாளர்கள் வந்த காரில் ISIS அமைப்பின் கொடி இருந்ததாக கூறப்படுவது, அது காவல்துறையின் கவனத்திற்கு வராமல் போனது எப்படி என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுமார் 1.17 லட்சம் யூதர்கள் வசித்து வரும் நிலையில், இஸ்ரேல்–ஹமாஸ் போர் தொடங்கியதிலிருந்து யூத சமூகத்திற்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இதுவரை, யூத எதிர்ப்பு தாக்குதல்கள் மற்றும் வன்முறைகள் 166-க்கும் மேல் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மெல்போர்னில் உள்ள Adass Israel ஜெப ஆலயம் தீவைக்கப்பட்ட சம்பவம், சிட்னி அருகே Lewis’ Continental Kitchen எனும் kosher உணவகம் தீக்கிரையானது, மேலும் Curly Lewis என்ற மதுபான ஆலயம் குறிவைக்கப்பட்டது உள்ளிட்ட பல சம்பவங்கள் யூத சமூகத்தில் அச்சத்தை அதிகரித்துள்ளன. இச்சம்பவங்களில், தோரா வேதத்தின் எபிரேய எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஓலைச்சுவடிகளும் சேதமடைந்தன.
Special Operation Avalite மற்றும் Strike Force Pearl போன்ற நடவடிக்கைகளின் கீழ் பல தீவிர வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை 12-க்கும் மேற்பட்டோர் யூத எதிர்ப்பு வன்முறைகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிட்னி மற்றும் மெல்போர்னில் உள்ள யூதத் தலைவர்கள், தங்களுக்கு தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் இருப்பதாக காவல்துறையிடம் மீண்டும் மீண்டும் புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் ஆஸ்திரேலிய அரசின் நிலைப்பாடு யூத எதிர்ப்பை ஊக்குவிப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமர்சித்திருந்தார். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், யூத வெறுப்பின் “புற்றுநோய் செல்களை” கட்டுப்படுத்தத் தவறியுள்ளதாகவும் அவர் கடுமையாக சாடியிருந்தார்.
மேலும், கடந்த ஆகஸ்ட் மாதமே இது குறித்து எச்சரிக்கை கடிதம் எழுதியதாகவும், அதை ஆஸ்திரேலிய அரசு புறக்கணித்துவிட்டதாகவும் நெதன்யாகு கூறியுள்ளார்.
இந்தத் தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் கூறிய தகவல்கள் காவல்துறையின் அலட்சியத்தை மேலும் வெளிச்சமிடுகின்றன. சுமார் 20 நிமிடங்கள் தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், பலமுறை தோட்டாக்கள் நிரப்பப்பட்டதாகவும், ஆனால் அந்த நேரத்தில் பொதுமக்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம், நீண்ட காலமாக நீடித்து வந்த யூத எதிர்ப்பு வன்முறைகள், உளவுத்துறை மற்றும் காவல்துறையின் அலட்சியத்தால் தற்போது பயங்கரவாத தாக்குதல்களாக மாறியுள்ளதை காட்டுகிறது. உளவுத்துறைச் சீர்திருத்தம், தீவிரவாதிகளை தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் காவல்துறைக்கு பயங்கரவாத எதிர்ப்பு சிறப்பு பயிற்சிகள் வழங்குதல் ஆகியவை உடனடியாக தேவை என பாதுகாப்பு நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.