தன்னைத் தானே புகழ்ந்து பேசும் அரசியலில் முதல்வர் ஈடுபடுகிறார் – அண்ணாமலை விமர்சனம்
பட்டியல் மற்றும் பழங்குடி சமூகத்தினரின் நலனுக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதியை முறையாக பயன்படுத்தாமல், ஒவ்வோர் ஆண்டும் அதைத் திருப்பி அனுப்பும் ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருவதாக முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்த மாணவர் விடுதிகளில், நூற்றுக்கும் அதிகமானவை மூடப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஒருகாலத்தில் மாநிலம் முழுவதும் 1,331 ஆதி திராவிடர் மாணவர் விடுதிகள் இயங்கி வந்த நிலையில், தற்போது 1,200 விடுதிகள் மட்டுமே செயல்பாட்டில் இருப்பதாகவும், மீதமுள்ள 100-க்கும் மேற்பட்ட விடுதிகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சுமார் 98 ஆயிரம் மாணவர்கள் தங்கிப் படிக்க வசதியாக உருவாக்கப்பட்ட இந்த விடுதிகளில், தற்போது வெறும் 65 ஆயிரம் மாணவர்களே தங்கி கல்வி பயில்கிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விடுதிகளில் சுத்தமான தங்குமிடங்கள், பாதுகாப்பான குடிநீர், சத்தான உணவு போன்ற அடிப்படை வசதிகள் கூட முறையாக வழங்கப்படாததால், மாணவர்கள் அங்கு தங்க விரும்புவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, மாணவர்களுக்காக வழங்கப்படும் உணவு தரமற்ற நிலையில் இருப்பதால், அது வீணாக்கப்பட்டு கால்நடைகளுக்கான தீனியாக விற்கப்படுவதாக முன்பே சுட்டிக்காட்டியதாகவும் அண்ணாமலை நினைவூட்டியுள்ளார்.
பட்டியல் சமூக மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அமைக்கப்பட்ட மாணவர் விடுதிகளின் அடிப்படை நோக்கமே திமுக ஆட்சியில் சிதைக்கப்பட்டுவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், பட்டியல் மற்றும் பழங்குடி சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு வழங்கும் நிதியை பயன்படுத்த மறுத்து, ஆண்டுதோறும் அதைத் திருப்பி அனுப்பும் திமுக அரசு, அந்த நிதியை விடுதிகளின் தரத்தை உயர்த்த பயன்படுத்துவதிலிருந்து எதைப் பயப்படுகிறது? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இத்தகைய சூழலில், “சமூக நீதி விடுதி” என்று பெயர் மாற்றம் செய்ததற்காக மட்டும், இரண்டு நாட்கள் விளம்பர நாடகம் நடத்தி, அதையே சாதனையாகக் காட்டி முதலமைச்சர் ஸ்டாலின் தன்னைத் தானே பாராட்டிக் கொண்டிருந்ததாக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
வாயளவில் சமூக நீதி குறித்து பேசுவதற்குப் பதிலாக, பட்டியல் சமூக மக்கள் மற்றும் மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக உண்மையான நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.