பாகிஸ்தானுடன் சேர்ந்து சீனா–துருக்கி சதி : தவிர்க்க முடியாத இரண்டாம் கட்ட ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ – லெப்.ஜெ. துஷ்யந்த் சிங் எச்சரிக்கை
இரண்டாம் கட்ட ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது என்றும், அதற்கான முழுமையான தயாரிப்புடன் இந்தியா இருக்க வேண்டும் என்றும், Land Warfare Studies மையத்தின் இயக்குனரும், ஓய்வுபெற்ற இந்திய ராணுவ உயர் அதிகாரியுமான லெப்டினன்ட் ஜெனரல் துஷ்யந்த் சிங் தெரிவித்துள்ளார்.
1968 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய விமானப்படையின் 18-வது படைப்பிரிவில் விமானியாக சேர்ந்த நிர்மல் ஜித் சிங் ஷெகோன், 1971 இந்தியா–பாகிஸ்தான் போரின் போது தன்னிகரற்ற வீரத்தைக் காட்டினார். ஸ்ரீநகரை தளமாகக் கொண்டு செயல்பட்ட அவர், எதிரியின் இடைவிடாத தாக்குதல்களையும் பொருட்படுத்தாமல் போர்க்களத்தில் முன்நின்று போராடினார்.
1971 டிசம்பர் 14-ஆம் தேதி, பாகிஸ்தான் விமானப்படை பதான்கோட், ஸ்ரீநகர் மற்றும் அமிர்தசரஸ் விமான நிலையங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியபோது, அதை தடுத்து நிறுத்தும் முயற்சியில் நிர்மல் ஜித் சிங் ஷெகோன் நாட்டுக்காக தன் உயிரைத் தியாகம் செய்தார். இந்திய விமானப்படையில் பரம் வீர் சக்ரா விருது பெற்ற ஒரே வீரர் என்ற பெருமை அவருக்கே உரியது. அவரது வீரத்தை நினைவுகூரும் வகையில், இந்திய விமானப்படை ஆண்டுதோறும் நினைவுச் சொற்பொழிவுகளை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு, குஜராத் கிளை விமானப்படை சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்வில் உரையாற்றிய லெப்டினன்ட் ஜெனரல் துஷ்யந்த் சிங், ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ என்பது ஒரு முடிவல்ல; அது இந்தியாவின் புதிய பாதுகாப்பு வியூகத்தின் தொடக்கம் எனக் குறிப்பிட்டார். சீனா மற்றும் துருக்கியின் ஆதரவுடன் பாகிஸ்தான் காஷ்மீர் மீது தீவிர கவனம் செலுத்தி வருவதாக கூறிய அவர், இதன் விளைவாக மீண்டும் ஒரு ஆப்ரேஷன் சிந்தூர் மேற்கொள்ள வேண்டிய நிலை உருவாகும் என எச்சரித்தார்.
ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றி, பாகிஸ்தானின் பலவீனங்களை உலகின் முன் வெளிப்படுத்தியதுடன், அணு ஆயுத வரம்புக்குக் கீழே இருந்தபடியே பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக இந்தியா தைரியமாக செயல்பட முடியும் என்பதையும் நிரூபித்ததாக அவர் தெரிவித்தார். 1971 போருக்குப் பிறகு முதன்முறையாக முப்படைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு மிகச் சிறப்பாக செயல்பட்டதாகவும், அரசியல் தெளிவு, ராணுவ துல்லியம் மற்றும் வான் பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் உலக நாடுகளை ஆச்சரியப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடைபெற்ற நான்கு நாட்களில், அரசு இணையதளங்கள் மீது நடந்த சைபர் தாக்குதல்கள் ஏழு மடங்கு அதிகரித்ததாகவும், மின்சாரத் துறை மட்டும் சுமார் இரண்டு லட்சம் சைபர் தாக்குதல்களை எதிர்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தேசிய பங்குச் சந்தை மீது சுமார் 40 கோடி சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும், இந்திய பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை முழுமையாக முறியடித்தன என்றும் அவர் கூறினார்.
பாகிஸ்தானும் சீனாவும் சமூக ஊடகங்களில் இந்தியாவுக்கு எதிரான பொய்க் கதைகளை தீவிரமாகப் பரப்பி வருவதாக சுட்டிக்காட்டிய துஷ்யந்த் சிங், தவறான தகவல்களை எதிர்கொள்வதற்காக ஆவணப்படுத்தப்பட்ட ஒரு தேசிய பாதுகாப்பு தகவல் வியூகம் அவசியம் என வலியுறுத்தினார்.
காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் இராணுவம் தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருப்பதால், எதிர்காலத்தில் எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்தார். இதனை எதிர்கொள்ள உளவுத்துறை, பாதுகாப்புச் செலவுகள் மற்றும் பல்துறை போர் திறன்களில் விரிவான சீர்திருத்தங்கள் தேவை என்றும், எந்தவொரு தாக்குதலையும் தடுத்து நிறுத்தவும், உறுதியான பதிலடி கொடுக்கவும் இந்தியாவின் முப்படைகளும் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.