ரூ.15 கோடி மதிப்புள்ள தங்கப் பேழையில் தாயாரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய மதபோதகர்
நைஜீரியாவில் பிரபல மதபோதகர் ஒருவர், மறைந்த தனது தாயாரின் உடலை சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புடைய தங்கப் பேழையில் அடக்கம் செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
நைஜீரியாவைச் சேர்ந்த நபி எரேமியா ஃபூஃபின்ஷன், உலகளவில் அறியப்பட்ட மதபோதகராக விளங்குகிறார். இவரது 104 வயதான தாயார் மாமா அசேது, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை காலமானார்.
இதனைத் தொடர்ந்து, அவரது சொந்த ஊரான பேயல்சா மாகாணத்தில் உள்ள அலீபிரி கிராமத்தில் இறுதி சடங்குகள் நடைபெற்றன. அப்போது, தாயாருக்கு இறுதி மரியாதையாக ரூ.15 கோடி மதிப்புள்ள தங்கத்தில் தயாரிக்கப்பட்ட பேழையில் அவரது உடலை வைத்து அடக்கம் செய்தார்.
பொதுவாக தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் அரச குடும்பங்கள் மற்றும் மிகப் பெரிய பணக்காரர்கள் மட்டுமே இதுபோன்ற விலையுயர்ந்த பேழைகளை பயன்படுத்தும் நிலையில், ஒரு மதபோதகர் இத்தகைய பேழையை பயன்படுத்தியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தாயாரின் நினைவாகவும், இறுதி மரியாதையாகவும் இந்தத் தங்கப் பேழையை பயன்படுத்தியதாக கூறப்படும் நிலையில், அந்த நிகழ்வின் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகின்றன.