மருதமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நாளை தொடக்கம்
கோவை மாவட்டம் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண உற்சவங்கள் நாளை (அக்.22) தொடங்குகின்றன.
நாளை காலை 7 மணிக்கு விநாயகர் பூஜையுடன் விழா தொடங்கி, காலை 9.15 மணிக்கு கங்கனம் கட்டுதல் நடைபெறும். அக்.22 முதல் அக்.28 வரை தினமும் காலை 10 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் 7 மணி வரை யாகசாலை பூஜை, அபிஷேகம் மற்றும் சுவாமி திருவீதி உலா நடைபெறும்.
அக்.27 அன்று காலை 6.30 முதல் 7.30 வரை மூலவரிடம் சண்முகார்ச்சனை நடைபெறும். அதே நாள் மதியம் 3 மணிக்கு அன்னையிடம் வேல் வாங்குதல் மற்றும் சுவாமி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும்.
அடுத்த நாள் (அக்.28) காலை 10.30 முதல் 11.30 வரை திருக்கல்யாண உற்சவம் மற்றும் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா நடைபெறும்.
விழா நாட்களில் (அக்.27, 28) மலைக்கோயிலுக்கு இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை. பக்தர்கள் மலைப்படிகள் வழியாகவும், கோயில் பேருந்து சேவையின் மூலமாகவும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.