வெளிநாட்டு லீக்குகளில் இந்திய வீரர்கள் விளையாட அனுமதி அளிக்க வேண்டும்: ரவி சாஸ்திரி
இந்திய வீரர்களை வெளிநாட்டு லீக்குகளில் விளையாட அனுமதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
தற்போது, இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெளிநாட்டு டி20 லீக்குகளில் பங்கேற்க பிசிசிஐ தடை விதித்துள்ளது. அவர்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று, வாரியத்திடமிருந்து ‘தடையில்லா சான்றிதழ்’ பெற்ற பிறகே விளையாட முடியும்.
சமீபத்தில், முன்னாள் இந்திய அணித் தலைவர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஆஸ்திரேலிய பிக் பாஷ் லீக்கில் சிட்னி தண்டர் அணியுடன் ஒப்பந்தம் செய்து, வெளிநாட்டு லீக்கில் இணைந்த முதல் உயர்மட்ட இந்திய வீரராகி உள்ளார்.
இதையடுத்து பேசிய ரவி சாஸ்திரி,
“இந்தியா ஒரு பெரிய நாடு; ஒவ்வொருவருக்கும் தேசிய அணியில் விளையாட வாய்ப்பு கிடைப்பதில்லை. டெஸ்ட் அணியில் இடம் பெற முடியாவிட்டாலோ, சி அல்லது டி ஒப்பந்தம் கிடைக்காவிட்டாலோ, பிக் பாஷ் அல்லது பிற வெளிநாட்டு லீக்குகளில் விளையாடுவதை ஏன் தடுக்க வேண்டும்?”
என்று கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் கூறினார்:
“ஐபிஎல் மூலம் இளைய வீரர்கள் உலகத் தரம் வாய்ந்த வீரர்களுடன் விளையாடி அனுபவம் பெறுகிறார்கள். அதுபோல வெளிநாட்டு லீக்குகளில் பங்கேற்பது அவர்களுக்கு புதிய திறன்களையும், கலாச்சார அனுபவங்களையும் வழங்கும். ரிக்கி பாண்டிங், ஸ்டீபன் பிளெமிங் போன்ற சர்வதேச நாயகர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும்.
வெளிநாட்டில் விளையாடுவது கிரிக்கெட் திறமையை மட்டுமல்ல, மனநிலை மற்றும் கலாச்சாரப் புரிதலையும் வளர்க்கும் சிறந்த அனுபவம்,”
என்றார்.