“நான் சாராயம் கொடுக்கவில்லை… புத்தகம் கொடுத்திருக்கிறேன்” – ரசிகர்களை கண்டித்த மாரி செல்வராஜ்
திருநெல்வேலியில் உள்ள திரையரங்கில் ரசிகர்களிடம் இயக்குநர் மாரி செல்வராஜ் கூறிய அறிவுரை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மாரி செல்வராஜ் இயக்கிய ‘பைசன் காளமாடன்’ படத்தில் துருவ் விக்ரம் நாயகனாக நடித்துள்ளார். பசுபதி, ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் அக்டோபர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ், நாயகன் துருவ் விக்ரம் மற்றும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட குழுவினருடன் திருநெல்வேலியில் உள்ள ஒரு திரையரங்குக்கு சென்றார். அப்போது படக்குழுவினர் பேசிக் கொண்டிருந்தபோது, சில ரசிகர்கள் விசில் அடித்து, ஆரவாரம் செய்து கொண்டிருந்தனர்.
இதைக் கண்ட மாரி செல்வராஜ் மைக்கை பிடித்து ரசிகர்களிடம் கூறியதாவது:
“நான் உனக்கு சாராயம் கொடுக்கவில்லை. நான் கொடுத்தது புத்தகம். என் சினிமாவை நீ புத்தகமாகப் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். உனக்கு சாராயம் கொடுத்து ஆடவைப்பதற்காக நான் இங்கு வரவில்லை. தயவு செய்து சாராயம் குடித்தது போல ஆடாதீர்கள். மகிழ்ச்சியாக இருங்கள்.”
அதோடு,
“ஒவ்வொரு படம் வரும்போதும் என்னை உங்கள் அண்ணனாக, தம்பியாக நினைத்து பார்க்கும் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி,”
என்றும் அவர் கூறினார்.
மாரி செல்வராஜின் இந்த உரை மற்றும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.