தொழிலாளர் நல நிதி தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்து செலுத்த உத்தரவு
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், தொழிலாளர் நல நிதி பங்குத் தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்து, அரசு இணையதளத்தின் மூலம் செலுத்துமாறு மாநிலம் முழுவதும் உள்ள நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து தொழிலாளர் நல வாரிய செயலாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
“தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி சட்டம், 1972 மற்றும் விதிகள், 1973-ன் படி தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத்தோட்டங்கள், உணவகங்கள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும், ஒரே ஆண்டில் 30 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த தொழிலாளர்கள் அனைவருக்கும், ஆண்டுதோறும் தொழிலாளர் நல நிதி பங்குத் தொகை செலுத்தப்பட வேண்டும்.
இதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான நிதியாக, தொழிலாளியின் பங்காக ₹20, நிறுவனத்தின் பங்காக ₹40 என மொத்தம் ₹60 வீதம் தொகை, 2025 டிசம்பர் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்து, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்துக்கு 2026 ஜனவரி 1க்குள் செலுத்தப்பட வேண்டும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நிறுவனங்கள் தங்கள் பெயரை wmis.lwb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, தொழிலாளர் நல நிதி தொகையை இணைய வழியாக செலுத்தி, ரசீதை உடனடியாக பதிவிறக்கம் செய்யலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே பழைய lwb.tn.gov.in தளத்தில் பதிவு செய்துள்ள நிறுவனங்களும், தற்போது செயல்பாட்டில் உள்ள புதிய IWMiS web portal-இல் மறுபதிவு செய்யுமாறும் தொழிலாளர் நல வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.